இத்தாலியில் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 6 வரை 82-வது வெனிஸ் திரைப்பட விழா (Venice Film Festival) நடைபெற்றது.
இதன் நிறைவு நாளில், இந்திய திரைப்பட இயக்குநர் அனுபர்ணா ராய் தன்னுடைய `சாங்ஸ் ஆஃப் ஃபர்கெட்டன் ட்ரீஸ் (Songs of Forgotten Trees)” என்ற இந்தி திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான ஒரிசோண்டி விருதை (Orizzonti Award for Best Director) வென்றார்.

இதன் மூலம், சிறந்த இயக்குநருக்கான ஒரிசோண்டி விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அனுபர்ணா ராய் பெற்றிருக்கிறார்.
இத்தனைக்கும் அனுபர்ணா ராய்க்கு, இதுதான் முதல் திரைப்படம். இதற்கு முன், ரன் டு தி ரிவர் (Run to the River) என்ற குறும்படத்தை இவர் இயக்கியிருந்தார்.
இந்த நிலையில், வெனிஸ் திரைப்பட விழாவில் விருதைப் பெறுகையில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக மேடையில் கண்ணீர் மல்க இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அனுபர்ணா ராய், “ஒவ்வொரு குழந்தைக்கும் அமைதி, சுதந்திரம், விடுதலைக்கான உரிமை இருக்கிறது. இதற்கு பாலஸ்தீனம் மட்டும் விதிவிலக்கல்ல.
இதற்காக நான் எந்த கைதட்டல்களையும் விரும்பவில்லை. இந்த நேரத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நிற்பது என் கடமை.
இவ்வாறு கூறுவதால் என்மீது என் நாட்டுக்கு அதிருப்தி வரலாம். ஆனால், அது எனக்கு ஒரு பிரச்னையுமல்ல” என்று கூறினார்.