‘குட் பேட் அக்லி’ படத்தின் வசூல் மற்றும் இளையராஜா விவகாரம் தொடர்பாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது.
’குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின் பாடல்கள் உபயோகித்தது குறித்து தயாரிப்பு நிறுவனத்துக்கும், இளையராஜாவுக்கு மோதல் வெடித்துள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக ‘டியூட்’ பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார்கள்.
‘குட் பேட் அக்லி’ விவகாரம் தொடர்பாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் ரவி, “சோனி மியூசிக்கிலிருந்து பாடல்களுக்கான உரிமையை நாங்கள் பெற்றிருக்கிறோம். ஒவ்வொரு பாடலுக்கும் சுமார் ரூ.15 முதல் ரூ.20 லட்சம் வரை செலுத்தியிருக்கிறோம்.
இளையராஜா அவர்களுக்கும், சோனி மியூசிக்கிற்கும் இடையே பிரச்சினை இருக்கிறது. இதனால் ‘குட் பேட் அக்லி’ படத்தில் பாடல்களை தற்காலிகமாக மாற்றியிருக்கிறோம். எங்களுடைய தரப்பில் இருந்து அனைத்துமே முறைப்படி தான் செய்திருக்கிறோம். அதற்கான வழிமுறைகளையும் சரியாகவே பின்பற்றியிருக்கிறோம். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கையில் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ‘குட் பேட் அக்லி’ வசூல் நிலவரங்கள் தொடர்பாக தயாரிப்பாளர் ரவி, “’குட் பேட் அக்லி’ படம் எங்களுடைய நிறுவனத்துக்கு பெரிய வசூல் சாதனையாக அமைந்தது. எங்களுக்கு பெரிய லாபம் ஈட்டவில்லை, ஆனால் நஷ்டமும் இல்லை. தமிழக வசூல் பெரியளவில் இருந்தது. எதிர்காலத்தில் அஜித்துடன் இன்னும் நிறைய படங்கள் பண்ணுவோம்” என்று தெரிவித்துள்ளார்.