‘நாட்டு நாட்டு’ பாடல் உலக அளவில் கவனம் பெற்றது. அதே சமயம், இந்த ‘நட்பு’ பாடலும் சர்வதேச மேடைகளில் இன்னும் சிறப்பாகக் கவனிக்கப்பட்டிருக்கலாம் என்று எனக்குத் தோன்றும். ஆனால், அது ஒரு கொண்டாட்டப் பாடல் என்பதால் அதற்கு அந்த வரவேற்பு கிடைத்தது. இசையமைப்பாளர் கீரவாணி எங்களிடம் பேசும்போது, ‘நாங்கள் தெலுங்குப் பாடலைப் பிரதிநிதித்துவப்படுத்தினோம். ஒருவேளை தமிழ்ப் பாடலை அங்கு அனுப்பியிருந்தாலும் அது வெற்றி பெற்றிருக்கும், எல்லாம் நம் உழைப்புதான்’ என்று குறிப்பிட்டார்.
இந்தப் பாடலை எழுதியபோது எனக்கு நெருக்கமான நண்பர்களின் நினைவுதான் வந்தது. எனக்கு நண்பர்கள் வட்டம் மிகச் சிறியது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் சுதர்ஷன் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் ராம்குமார் ஆகிய இருவரும்தான் என் நெருங்கிய நண்பர்கள். குறிப்பாகச் சுதர்ஷனுடன் நான் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டம் வரை ஒன்றாகப் பயின்றேன். நாங்கள் இருவரும் நிறைய சண்டையிட்டுக் கொள்வோம், அதே சமயம் பல புதிய விஷயங்களைச் சேர்ந்து உருவாக்கியிருக்கிறோம். அந்தப் பயணத்தின் பிம்பம்தான் இந்தப் பாடல் வரிகளை எழுதும்போது என் கண்முன்னே வந்து நின்றது” என்கிறார் மதன் கார்க்கி.





கருத்தை பதிவு செய்யுங்கள்