சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் “வடசென்னை’ உலகத்தை மையமாகக் கொண்ட கதையாக அரசன் படம் உருவாகிறது. அனிருத் இசையில், தயாரிப்பாளர் தாணு தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட சில தினங்களிலேயே நிறுத்தப்பட்டது. இதற்கு நடிகர் சிம்புவுக்கும், தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கும் இடையிலான பிரச்னைதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
இதற்கிடையில், சிம்பு நடிக்கும் ஒரு விளம்பரப் படப்பிடிப்பும் இதே காரணத்தால் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த விவகாரங்கள் திரையுலகில் விவாதமான நிலையில், நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “’அரசன்’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது ஏன்? நிறுத்தியது யார்? நிறுத்த சொன்னது யார்? நியாயம் கேட்க வருகிறார் இந்த டி.ஆர்.,

அரசனுக்காகவோ, சிலம்பரசனுக்காகவோ வாதாடுவதற்காக நான் வரவில்லை. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், அதற்கு துணையாக நிற்கும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமும் அறம்தவறி நடந்துவிடக்கூடாது என்பதை சுட்டிக்காட்டவே நான் வருகின்றேன். ஆம் சிலம்பரசன் நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தை எடுத்த மரியாதைக்குரிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்கள், சிலம்பரசனுக்கு எதிராக வழக்கு மன்றத்துக்கு சென்றார். வழக்கு தொடுத்தார்.
