கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனமும் ராணா டகுபதியின் ‘ஸ்பிரிட் மீடியா’ தயாரிப்பு நிறுவனமும் முதல்முறையாக ஒன்றாக இணைந்து ‘நீளிரா’ படத்தைத் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தை இலங்கைத் தமிழர் சோமிதரண் இயக்கியுள்ளார். ஏப்ரல் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் பட டிரெய்லர், கவனம் ஈர்த்து வருகிறது.
‘நீளிரா’ பட முன்னோட்ட நிகழ்ச்சி விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய வெற்றிமாறன், “வரலாறு என்பது எப்போதும் அதிகாரத்தில் இருப்பவர்களால் எழுதப்படுவது. ஆனால், கலையின் வழியாக நாம் நம்முடைய வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

நம்முடைய கதைகளை நாமே சொல்லாதவரை, நம் எதிரிகள் சொல்வதுதான் உண்மையாகிவிடும். அதுவே நியாயமாகவும் கருதப்படும். அந்த அடிப்படையில், ஈழத்திலிருந்து வந்த இளைஞர்கள் தங்களின் வலியையும் நினைவுகளையும் தாங்களே ஆவணப்படுத்தியிருப்பது ஒரு பெரிய ஜனநாயகச் செயல்.
இந்தப் படத்தில் ரத்தமும் சதையுமான நேரடி வன்முறை காட்சிகள் இல்லை என்று சொல்லப்பட்டாலும், இதன் ஒவ்வொரு காட்சியும் மிகத் தீவிரமான வன்முறையைத் தாங்கியிருக்கிறது.
உதாரணமாக, ராணுவம் கதவைத் தட்டும் சத்தம் கேட்டவுடன், வீட்டிலுள்ள பெண்கள் பயத்தில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கூடுதல் ஆடைகளை அணிந்து கொள்வது என்பது வன்முறையை விடவும் அதிர்ச்சியான ஒரு பதிவு.
