அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக நாளை “பில்லா’ ரீரிலீஸ் ஆகிறது. ‘அமராவதி’ அஜித்தை ஸ்டைலிஷ்ஷான அஜித் ஆக மாற்றிய படம் ‘பில்லா’ விஷ்ணுவர்தனின் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் ‘பில்லா’ இப்போது கலர்ஃபுல் காக்டெயிலான இனிக்கிறது. அதன் ஓப்பனிங் ஷாட் முதல் கடைசி ஃப்ரேம் வரை ‘பாண்ட்’ பட ஃபீலிங்கைக் கொண்டுவந்திருப்பார் டைரக்டர் விஷ்ணுவர்தன். அஜித்தை கோலிவுட் ஹீரோயிஸத்திலிருந்து ஹாலிவுட் ஹீரோயிஸத்துக்குத் தாவ வைத்த படம், ‘பில்லா.’ இப்போது ‘பில்லா’வின் சுவாரஸ்யங்கள் குறித்து விஷ்ணுவர்தனிடம் பேசினோம்.

மலேசியாவில்

மலேசியாவில்

“ ‘பில்லா’ மீண்டும் திரைக்கு வருவது கடவுளின் ஆசீர்வாதத்தால்தான் என நினைக்கிறேன். இந்தப் படத்தை ஆரம்பிக்கிறதுக்கு முன்னர் சினிமாவைச் சேர்ந்த முக்கியமானவர்கள் சிலர் ` அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், ஷாருக் கான் என முன்னனி நடிகர்கள் ஏற்கெனவே இந்தப் படத்தை செய்துவிட்டார்கள். புதிதாய் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?’ எனக் கேட்டார்கள். எதையும் காதில் வாங்காமல் படத்தை உருவாக்கினோம். ஆனால் படம் ரெடியாகி அதன் டிரெய்லர் வெளியானபோது படத்தை எடுக்க வேண்டாம் என்று சொன்னவர்களே பெரிதும் பாராட்டினாங்க. அங்கிருந்து தொடங்கிய வெற்றி தொடருது. அஜித் சாரை நான் சந்திச்சதே இனிமையான தருணம். அப்போ நான் ஷாருக் கானின் ‘அசோகா’ படத்துல அசோசியேட்டாக வேலை செய்திட்டிருந்தேன். அங்கே தான் சாரை சந்தித்தேன்.

பிரபுவுடன்..

பிரபுவுடன்..

அப்புறம் இந்தியில் இருந்து தமிழுக்கு வந்துட்டேன். ஏன்னா, என் முதல் படத்தை தமிழில்தான் இயக்கணும்னு விரும்பினேன். ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’ படங்களை இயக்கினேன். அந்த சமயத்துல அஜித் சார் ‘நான் கடவுள்’ படத்துல நடிக்கறதா இருந்தது. அதற்காக அவரோட உடல் எடையைக் குறைச்சிருந்தார். ஒரு விழாவுல அவரை பார்த்தேன். அவருக்கு என்னை ஞாபகம் இருக்குமானு தெரியல. அதனால அவரிடம் பேசத் தயங்கி ஒரு ஓரமாக ஒரு இடத்துல நின்னுட்டிருந்தேன். அங்கே என்னை கவனித்த அஜித் சார் அவரே நேராக என்னிடம் வந்து, ‘நீங்க படம் பண்றத பாக்குறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு. நாம ரெண்டு பேரும் ஒரு படம் பண்ணலாம்’னு சொல்லிட்டுப் போனார். அந்த தருணத்தை என்னால நம்பவே முடியல.

நயன்தாராவுடன்

நயன்தாராவுடன்

‘பில்லா’ படத்தை பத்தி என்ன நினைக்குறீங்க?

அதன் பிறகு ஒருநாள் அஜித் சார்கிட்ட இருந்து போன் வந்தது. ‘உங்ககிட்ட எனக்கு கதை இருக்குதா?’னு கேட்டார். அந்த டைம்ல நான் வேறொரு படத்துக்கான கதையை ரெடி செய்துட்டு இருந்தேன். அவருக்கான கதை கைவசம் இல்லை. தவிர அவர் என்கிட்ட கதை கேட்பார்னு நினைக்கல. அவரோடு நடந்த உரையாடலில்தான் ‘பில்லா’வுக்கான ஐடியா வந்தது. `’பில்லா’ படத்தை பத்தி என்ன நினைக்குறீங்க?’னு கேட்டார். ஷாருக் கானின் நடிப்பில் ‘டான்’ (பில்லா) வெளியாகியிருந்த தருணம் அது. திரையரங்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. `அதையே தமிழில் செய்யலாமா’ என்றதும் எனக்கு சந்தோஷம். ஏன்னா, இது போன்ற வாய்ப்புகள் கிடைப்பது அரிது. அமிதாப், ஷாருக், ரஜினி சார்னு டாப் ஹீரோக்கள் நடிச்ச ஒரு கதையை எடுக்கப் போறோம் என்ற ஆச்சர்யத்தை விட, அவங்க படங்களை விட நாம பண்றதுல என்ன புதுமையை கொடுக்கணும்னு பிரெஷராகிடுச்சு. நம்ம ‘பில்லா’வை பார்க்கும் போது ஒரு விஷயம் புரிஞ்சிருக்கும். இந்தியில் வெளியான ‘டான்’, ‘டான்-2′ படங்களின் சாயல் இதில் இருக்காது. இதில் `பில்லா’ கதை முழுவதுமே அஜித் சாரின் கதாபாத்திரத்தை சுற்றியே இருக்கும். கதைக்குத் தேவையற்ற சில கதாபத்திரங்கள் நீக்கப்பட்டிருக்கும், அதேபோல புதுசா சில கதாபாத்திரங்கள் சேர்க்கப்பட்டிருக்கும். இந்த சவால்களுடன்தான் ‘ பில்லா’வை தொடங்கினோம்.

ரிலாக்ஸாக

ரிலாக்ஸாக

அஜித் சாரை பொறுத்தவரையில் அவர் ஒரு இயக்குநரை முழுமையாக நம்புவார். கதையில் எந்த சமரசமும் கேட்க மாட்டார். ஒவ்வொரு காட்சியில் நடிக்கும் போதும் முழுமையான புரிதலுடன் தான் நடிப்பார். நமிதா கொல்லப்படும் சீனில், பில்லா மாட்டிக்கொள்ளும் நிலை ஏற்படும். அந்த இடத்தில் பில்லாவுக்கு பதில் வேணு இருப்பார் அவர் எப்படி தப்பிப்பார்? என அவருக்கு ஒரு குழப்பம் இருந்தது. அதைப் பற்றி என்னிடம் கேட்டார், நான் அவருக்கு விளக்கம் சொன்ன பின்பு மாஸாக அந்த சீனை முடித்துக்கொடுத்தார். ரிஸ்க் எடுக்க தயங்காதவர். மலேசியாவுல தான் படப்பிடிப்பு. பாலத்துல இருந்து அவர் குதிக்கும் காட்சியில் டூப் போடாமல் அவரே செய்து அசத்தினார். மலேசியாவில் அஜித் சாருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. ரசிகர்கள் கூட்டத்தைக் கட்டுபடுத்துவது பெரிய விஷயமாக இருந்தது.

மானிட்டரில்

மானிட்டரில்

ஆனா, அஜித் சார் அதை அழகா ஹேண்டில் செய்தார். ‘சேவற்கொடி பறக்குதடா’ பாடலில் நீங்கள் பார்க்கும் கூட்டம் உண்மையான மக்கள் கூட்டம். பாடலை படமாக்கும்போதே அங்கிருந்தவர்களிடம் ‘நீங்கள் தாராளமாக இங்கு நின்று நடப்பத்தைப் பார்க்கலாம், நடுவில் வந்து சிரமம் தராதீர்கள்’ என்றேன். இதையே அஜித் சாரும் சொன்னார். அவர் சொன்னவுடன் அத்தனைப்பேரும் அதை பின்பற்றினார்கள். அவ்வளவு பெரிய கூட்டத்தை ஒரே வரியில் அமைதிப்படுத்தி எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டார். சில சமயங்களில் படப்பிடிப்பு தளத்திலேயே அவரது போர்ஷன் இல்லாத சமயங்களில் தெர்மாகோல் விரித்துப் அதிலேயே படுத்துவிடுவார். அப்படி ஒரு எளிமை.

பில்லாவில்

பில்லாவில்

`நான் முதலில் ஒரு ரேஸர் பயப்படாதீங்க!’

அதைப் போல மலைப்பாதையில் கார் ட்ரிஃப்டிங் சீன் வேண்டாம் என்றேன், ஆனால் அஜித் சார் ` நான் முதலில் ஒரு ரேஸர் பயப்படாதீர்கள்’ எனச் சொல்லி அந்த சீனை செய்துதந்தார். இது மட்டுமில்லை படத்தில் நீங்கள் பார்த்த எல்லா ட்ரிஃப்டிங் சீன்களும் அவர் செய்ததுதான். நயன்தாராவிடம் எப்போதும் ஒரு குடும்பப் பெண்ணின் சாயல் இருக்கும். ஆனால், அதையும் தாண்டி இயல்பாகவே அவருக்குள் ஒரு ஆட்டிட்யூட் இருக்கும் அதை பில்லாவில் பயன்படுத்தினோம். நயன்தாரா உடல் எடையை குறைத்தது இன்னொரு ப்ளஸ். நயன்தாரா கதாபாத்திரதிலும் சில விஷயங்கள் தானாகவே அமைந்துவிட்டன. அதைப் போல நண்பர் யுவன் இசையும் படத்துக்கு பெரியபலமாக இருந்தது.”

விஷ்ணுவர்தன் பில்லாவைத் தொடர்ந்து, அஜித்தை வைத்து `ஆரம்பம்’ படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படமும், இண்டஸ்ட்ரி ஹிட்!



Source link