கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனமும் ராணா டகுபதியின் ‘ஸ்பிரிட் மீடியா’ தயாரிப்பு நிறுவனமும் முதல்முறையாக ஒன்றாக இணைந்து ‘நீளிரா’ படத்தைத் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தை இலங்கைத் தமிழர் சோமிதரன் இயக்கியுள்ளார். ஏப்ரல் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் பட டிரெய்லர் கவனம் ஈர்த்து வருகிறது.
‘நீளிரா’ பட முன்னோட்ட நிகழ்ச்சி விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய இயக்குநர் ராஜூ முருகன், “உலகில் இன்று ஏவுகணைகளும் குண்டுவெடிப்புகளும் நிகழ்த்தும் போருக்கு இணையாக, சத்தமில்லாமல் ஒரு “கருத்தியல் போர்’ நடந்து கொண்டிருக்கிறது. அணுஆயுதப் போரை விடவும் இது மிக முக்கியமானது. இதற்கு உதாரணமாக இஸ்ரேல் தேசம் உருவான வரலாற்றைச் சொல்லலாம்.

பாலஸ்தீன நிலப்பரப்பை ஆக்கிரமித்து இஸ்ரேலை உருவாக்க 150 ஆண்டுகளுக்கு முன்பே ‘சியோனிச’ அமைப்புகள் கதைகளை உருவாக்கத் தொடங்கின. 1900-களில் அவர்கள் முதலில் ஒரு வங்கியை நிறுவி, பாலஸ்தீன விவசாயிகளுக்கு நிலத்தின் பெயரில் கடன் கொடுத்து, கடனைத் திருப்ப முடியாமல் போனவர்களின் நிலங்களைப் பறித்து இஸ்ரேலின் பாதி நிலப்பரப்பைக் கையகப்படுத்தினார்கள்.
