அடுத்த அதிரடிக்கு ரெடியாகிவிட்டார் “சீயான்’விக்ரம். ‘வீரதீர சூரன்’ படத்திற்கு பின் அடுத்து அவர் பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார். “சில நேரங்களில் மௌனம் என்பது ஒரு மிகப்பெரிய தயாரிப்புக்கான இடைவெளி. என்னை நெகிழ வைக்கும் கதைகளுக்காக இந்த ஆண்டு முழுவதும் காத்திருந்தேன். இப்போது, நான் மிகவும் மதிக்கக்கூடிய இயக்குநர்களுடன், முற்றிலும் மாறுபட்ட நான்கு திரைப்படங்களில் பணிகளைத் தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நான்கு பயணங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள நான் ஆவலாக இருக்கிறேன்.” எனச் சொல்லியிருந்தார். தமிழ் சினிமாவில் வெற்றிகள் கொடுத்த இயக்குநர்கள் பலரிடம் கதைகள் கேட்டு வந்தவர், இப்போது ‘இருமுகன்’ ஆனந்த் சங்கரின் இயக்கத்தில் நடிக்க ரெடியாகிறார்.

‘வீரதீர சூரன்’ படத்திற்குப் பிறகு ‘சீயான் 63’ ஆக அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமாரின் படம் உருவாகும் என்ற தகவல் பரவியது. இப்போது அதில் மாற்றம் வந்திருக்கிறது. போடி ராஜ்குமாரின் படம் தள்ளிப்போகிறது. இந்நிலையில் விக்ரம் ‘இருமுகன்’ ஆனந்த் சங்கரின் இயக்கத்தில் நடிக்க ரெடியாகி வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் ஆனந்த் சங்கர் சொன்ன கதையைக் கேட்ட விக்ரம், நெகிழ்ந்ததுடன் உடனே ஓகே சொல்லிவிட்டார்.




