ஃபகத் பாசில் நடிக்கவுள்ள படத்தை இயக்கவிருப்பதாக பிரேம் குமார் தெரிவித்துள்ளார்.
வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க விக்ரம் நடிக்கவுள்ள படத்தினை இயக்கவிருந்தார் பிரேம் குமார். இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது. ஆனால், இறுதிகட்ட கதை விவாதத்தின் போது விக்ரம் – பிரேம் குமார் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே அப்படம் கைவிடப்பட்டது. இதனால் அக்கதைக்கு வேறொருவரை நாயகனாக நடிக்க வைக்க முடிவு செய்தார் பிரேம் குமார்.
அக்கதையினை ஃபகத் பாசிலை சந்தித்து கூறியிருக்கிறார் பிரேம் குமார். அவருக்கு கதை மிகவும் பிடித்துவிடவே, உடனடியாக தேதிகள் கொடுத்திருக்கிறார் ஃபகத் பாசில். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்க திட்டமிட்டுள்ளது படக்குழு. தற்போது ஃபகத் பாசிலுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படம் முழுக்க த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ளது.
ஃபகத் பாசில் படத்தினை முடித்துவிட்டு, அடுத்ததாக ஆக்ஷன் கதை ஒன்றும், நாயகியே இல்லாத காதல் கதை ஒன்றும் எழுதியிருப்பதாக பிரேம் குமார் தெரிவித்துள்ளார். இரண்டில் ஏதேனும் ஒன்றிணை அடுத்து இயக்கவுள்ளதாகவும் பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார் பிரேம் குமார். ‘96’ மற்றும் ‘மெய்யழகன்’ ஆகிய படங்களின் பிரம்மாண்ட வரவேற்புக்குப் பிறகு உருவாகும் படம் என்பதால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.