அக்டோபரில் இந்தியிலும் ‘த்ரிஷ்யம் 3’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. மலையாளத்தில் உருவாகும் அதே கதையா என்ற குழப்பம் தொடங்கியிருக்கிறது.
அக்டோபரில் ‘த்ரிஷ்யம் 3’ படப்பிடிப்பு தொடங்கும் என்று தயாரிப்பாளர் ஆண்டனி, மோகன்லால் மற்றும் இயக்குநர் ஜீத்து ஜோசப் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். இது ‘த்ரிஷ்யம்’ படங்களின் ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தை அளித்திருக்கிறது. அதே வேளையில் இந்தியிலும் அக்டோபரில் ‘த்ரிஷ்யம் 3’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
அக்டோபர் மாதத்தில் மகாராஷ்ராவில் ‘த்ரிஷ்யம் 3’ படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. 3 மாதங்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து, அடுத்த ஆண்டு காந்தி ஜெயந்தி விடுமுறைக்கு வெளியிட படக்குழு இப்போதே முடிவு செய்திருக்கிறது. முந்தைய பாகங்கள் போலவே, இதிலும் அஜய் தேவ்கான் நாயகனாக நடிக்கவுள்ளார். முதல் இரண்டு பாகங்களை இயக்கிய அபிஷேக் பதக் இந்தப் படத்தையும் இயக்கவுள்ளார்.
மலையாளத்தில் உருவாகும் ‘த்ரிஷ்யம் 3’ கதையா அல்லது இது வேறு கதையா என்று படக்குழுவினர் அறிவிக்கவில்லை. அது ஜூலையில் இறுதியில்தான் தெரியும் என்று பதிலளித்துள்ளனர். ‘த்ரிஷ்யம்’ படத்தின் கதை இன்னும் முழுமையாக முடியவில்லை. ’த்ரிஷ்யம் 3’ தான் கதையின் இறுதி என்று இயக்குநர் ஜீத்து ஜோசப் அறிவித்துவிட்டார். இதனால் திடீரென்று வெளியாகியுள்ள இந்தி ‘த்ரிஷ்யம் 3’ அறிவிப்பு, ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது.