உமா பிக்சர்ஸ் மூலம் படங்கள் தயாரித்து வந்த ஆர்.எம்.ராமநாதன் செட்டியார், தியாகராஜ பாகவதரின் நெருங்கிய நண்பர். சென்னையில் இருந்த நியூடோன் ஸ்டூடியோவின் நிறுவனர்களில் ஒருவராகவும் இருந்த அவருக்கு, ‘ஆடியோகிராஃபி’யில் தீவிர ஆர்வம். அதனால் தனது நிறுவனம் மூலம் தயாரித்த பெரும்பாலான படங்களில் ‘ரெக்கார்டிஸ்டா’கவும் பணியாற்றினார். அவர் தயாரித்த ‘உதயணன் வாசவதத்தா’ படத்திலும் அப்படித்தான்.
இது புராணம் கலந்த கற்பனை கதை. உத்தர பிரதேசத்தில் கங்கை மற்றும் யமுனை ஆற்றின் அருகில் அமைந்திருந்த வச்த நாட்டை ஆண்டவன், உதயணன். இன்றைய கோசாம்பிதான் அதன் தலைநகர். வீணை வாசிப்பதில் திறமையானவனான உதயணனின் இசையை கேட்டு, யானைகள் கூட அசைவின்றி நிற்கும். அவன், இளவரசி வாசவதத்தாவைக் காதலித்து வருகிறான். இதற்கிடையே உதயணனுக்கு ஒரு தெய்வீக யானையை பரிசாக அளிக்கிறார் இந்திரன். உதயணன் செய்யும் தவறால், அது அவரை விட்டுச் சென்று விடுகிறது. மனம் வருந்தும் உதயணன் அதைத் தேடிச் செல்கிறார்.
அப்போது தனது காதலி வாசவதத்தாவை வேறொரு நாட்டில் விட்டுச் செல்கிறார். அங்கு வேறொரு பெயரில், நடனமும் இசையும் கற்றுக்கொடுக்கிறார் அவர். இந்நிலையில் மரகதகல்லில் செய்யப்பட்ட போலி யானையை காட்டி உதயணனை வரவழைத்து மன்னன் ஒருவன், அவரை கைது செய்கிறான். அவனுடைய நாட்டையும் கைப்பற்றுகிறான். இந்தச் சிக்கல்களில் இருந்து மீண்டு தனது காதலியை உதயணன் எப்படிக் கைப்பிடித்து, நாட்டை மீட்கிறான் என்பது கதை.
இதை அந்த காலகட்டத்தில் பிரபலமாக இருந்த டி.ஆர்.ரகுநாத் இயக்கினார். அவருடைய சகோதரர் ராஜா சந்திரசேகர் இதன் கதையை எழுதினார். முதலில் இதில் நாயகனாக நடிக்க இருந்தவர், தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதர். அவர் நடிப்பதாக விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன. ‘இந்து’ இதழில் முதல் பக்கத்தில் தியாகராஜ பாகவதர், குதிரையில் நிற்பது போன்ற விளம்பரம் முழு பக்கத்தில் வெளியாகி இருந்தது. பரதநாட்டிய கலைஞரும் சிறந்த கர்னாடக இசைப் பாடகியுமான வசுந்தரா தேவி நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். அப்போது அவர் புகழின் உச்சத்தில் இருந்தார். பாகவதரின் குரலில் பாடல்கள் பதிவு செய்யப்பட்டுப் படப்பிடிப்பு தொடங்கி நடந்து கொண்டிருந்த போது, 1945 டிசம்பர் மாதம் லட்சுமி காந்தன் கொலை வழக்குக்காகக் கைது செய்யப்பட்டு சிறை செல்ல நேரிட்டது, பாகவதருக்கு.
இதனால் அவர் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டு, கர்னாடக இசைப் பாடகர் ஜி.என்.பாலசுப்பிரமணியனை ஹீரோவாக நடிக்க வைத்தனர். அப்போது நன்றாகப் பாடத் தெரிந்தால், ஹீரோ வாய்ப்பு தேடி வரும். அப்படித்தான் இந்த வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. நாயகியாக வசுந்தரா தேவி நடித்தார்.
இவர்களுடன் எம்.எஸ்.சரோஜா, டி.பாலசுப்ரமணியம், கே.சாரங்கபாணி, காளி என்.ரத்னம், சி.டி.ராஜகாந்தம், என்.கிருஷ்ணமூர்த்தி, பி.எஸ்.வீரப்பன் (பிறகுதான் வீரப்பா என பெயர் மாற்றிக் கொண்டார்), டி.கே.சம்பங்கி, எம்.வி.மணி, கொளத்து மணி, ராஜா, கமலம், கே.என்.ராஜம் மற்றும் என்.நாகசுப்ரமணியம் என பலர் நடித்தனர்.
இந்தப் படத்துக்கு உதயகுமாரும், ஏ.எஸ்.ஏ.சாமியும் வசனம் எழுதினர். ஏ.எஸ்.ஏ.சாமி பின்னர் கதாசிரியர் மற்றும் இயக்குநராக புகழ்பெற்றார். எம்.ஜி.ஆரை ஹீரோவாக அறிமுகப்படுத்தியவரும் இவரே. சி.ஆர்.சுப்பராமன் இசை அமைத்தார். பாபநாசம் சிவன், கம்பதாசன் பாடல்கள் எழுதினர். மார்கஸ் பார்ட்லே ஒளிப்பதிவு செய்தார்.
வி.பி.ராமையா பிள்ளை நடனங்களை அமைத்தார். நாயகி நடனம் கற்றுக்கொடுப்பவர் என்பதால், கதக், மணிப்பூரி, பஞ்சாபி நடனங்களை காமினி குமார் சின்ஹா அமைத்தார். இந்தப் படத்தில் நடிகர், நடிகைகளுக்கான உடைகளை எம்.நடேசன் உருவாக்கினார். இவர், பின்னர் தயாரிப்பாளராக மாறி, எம்.ஜி.ஆரின் மன்னாதி மன்னன், ஜெமினி கணேசனின் ஆசை, சிவாஜி கணேசனின் அன்பு என சில படங்களைத் தயாரித்தார்.
1947-ம் ஆண்டு இதே நாளில் வெளியான இந்தப் படத்தில், ஜி.என். பாலசுப்பிரமணியன், வசுந்தரா ஆகியோரின் இனிமையான பாடல்கள், நடனம், பிரம்மாண்ட செட்டுகள் இருந்தாலும் படம் பெரும் வெற்றியை பெறவில்லை. இந்தப் படம் வெளியான ஆண்டுதான் பாகவதர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.