என் கரியரில் முக்கியமான படம் ‘கராத்தே பாபு’ என்று நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டார் ரவி மோகன். அதனைத் தொடர்ந்து அவர் பேட்டி அளித்தார். அதில் தனது அடுத்த படங்கள் குறித்து பேசியிருக்கிறார். அப்பேட்டியில் ரவி மோகன், “’கராத்தே பாபு’ படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கிட்டதட்ட இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டிவிட்டோம். இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கின்றன. அப்படத்தில் இருப்பது போன்று என்னை நானே பார்த்தது கிடையாது. புதிதாக ஒரு விஷயத்தை முயற்சி செய்யலாம் என்ற எண்ணம் தான். அது ‘கராத்தே பாபு’ படத்தில் நடக்கிறது. அப்படம் என் கரியரில் ஒரு முக்கியமான படமாக இருக்கும்.
‘ஜீனி’ படப்பிடிப்பு மொத்தமாக முடிவுற்று, கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. கூடிய விரைவில் வெளியீட்டுக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். சுதா கொங்காரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் என்று சொல்லலாம். அதில் சில புதிய விஷயங்கள் முயற்சி செய்கிறேன்.” என்று தெரிவித்தார்.