இடைவேளைக்குப் பிறகு காட்சிகளைக் குறைத்து உரையாடலை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். அது சற்றே அயர்ச்சியடையச் செய்யும் போக்கு! அதேபோல துணைக்கதையாக வரும் திருட்டுச் சம்பவம் திரைக்கதைக்கு மிகவும் அவசியம் என்கிற வகையில் அதை இன்னும் அழுத்தமாகப் பதிவாகியிருக்கலாம். காவல்துறையின் விசாரணை முறையும் மிகவும் மேலோட்டமாகவே இருக்கிறது. இது முன்னோக்கிச் செல்லும் திரைக்கதையைச் சற்றே பின்னே இழுக்கும் லாஜிக் மீறல்களாக மாறிவிடுகின்றன. அதேபோல காதலின் பின்னணி சொல்லப்பட்ட விதத்திலேயே இறுதிக் காட்சி எதை நோக்கிப் பயணிக்கிறது என்பதையும் எளிதாகக் கணிக்க முடிகிறது. ஆனாலும் க்ளைமாக்ஸ் இதுதான் என்று தெரிந்தும் அது படமாக்கப்பட்ட விதமும், ரூபா, கீதா கைலாசத்தின் நடிப்பும் அட்டகாசமான எமோஷனல் டிராமா!
பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் அவளின் பிணமே எழுந்து போராட வேண்டியிருக்கும் என்று சொல்லும் இந்த ‘எமகாதகி’யை முழுமனதுடன் அரவணைத்துக் கொண்டாடலாம்.