கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியுள்ள படம், ‘ஓஹோ எந்தன் பேபி’. இதில் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா, கதாநாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார். ஜென் மார்ட்டின் இசை அமைத்துள்ளார்.
ரொமான்டிக் படமான இதை, ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. ஜூலை 11-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள் வெற்றிமாறன், தியாகராஜா குமாரராஜா, செல்லா அய்யாவு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, நடிகர் கார்த்தி என பலர் கலந்துகொண்டனர்.
விஷ்ணு விஷால் பேசும்போது, “ருத்ரா, என்னுடைய சொந்த தம்பி இல்லை. பெரியப்பா மகன். அப்பா – பெரியப்பா இருவரும் எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள். இருந்தாலும் அவர்களுக்கு சினிமா மீது தீராத காதல் உண்டு. இருவரும் பத்தாம் வகுப்பு வரை படித்தார்கள். பிறகு பெரியப்பாவுக்கு படிப்பு வரவில்லை. அதனால் அவர் வேலைக்கு சென்று எனது அப்பாவை படிக்க வைத்து, ஐபிஎஸ் ஆக்கினார்.
அவருடைய பையன் தான் ருத்ரா. அவருக்கு நான் செய்ய வேண்டிய கடமை எப்படிப்பட்டது என்பது இதன் மூலம் உங்களுக்குப் புரிந்திருக்கும். இந்த மேடையில் நான் இன்று இருக்க காரணமே அவர்தான். அப்படி என்றால் ருத்ராவை எந்த அளவுக்கு அவர் சொல்லி வளர்த்திருப்பார் என்று பாருங்கள்” என்றார்.
நடிகர் கார்த்தி பேசும்போது, “விஷ்ணு விஷால் மேடையில் சொன்ன கதையை கேட்ட போது ‘வானத்தை போல’ படம் போல இருந்தது. அந்த படத்தை போல உண்மையில் இருப்பார்களா? என்று நினைத்தேன். ஆனால், இருக்கிறார்கள் என்பது ஆச்சரியம் தான்” என்றார்.