‘சக்திமான்’ திரைப்படம் ரன்வீர் சிங் நடிப்பில் மட்டுமே உருவாகும் என்று நடிகரும் இயக்குநருமான பசில் ஜோசப் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். இதன் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இதனை முடித்துவிட்டு பசில் ஜோசப் இயக்கத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. பசில் ஜோசப் இயக்கத்தில் என்றால், ‘சக்திமான்’ படத்தில் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கவுள்ளார் என யூகிக்கப்பட்டது.
இந்தச் செய்தி இணையத்தில் வைரலானது. இது தொடர்பாக சமீபத்திய நேர்காணலில் பசில் ஜோசப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்தார். “ரன்வீர் சிங் நடிப்பில் மட்டுமே ‘சக்திமான்’ உருவாகும். இது தொடர்பாக வதந்திகளை பரப்புபவர்கள் நிச்சயமாக அவர்களின் சுயலாபத்துக்காக செய்கிறார்கள்” என்றார். இதன் மூலம் ‘சக்திமான்’ படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
‘சக்திமான்’ படத்தில் ரன்வீர் சிங் – பசில் ஜோசப் கூட்டணி இணையவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அப்படம் கைகூடவில்லை. பசில் ஜோசப் அளித்துள்ள பேட்டியின் மூலம், விரைவில் அப்படம் கைகூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.