மறைந்த விஜயகாந்தின் மகன், சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘படைத் தலைவன்’. இதை அன்பு இயக்கி உள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார். விஜே கம்பைன்ஸ், தாஸ் பிக்சர்ஸுடன் இணைந்து வழங்கும் இந்தப் படத்தை ஜகநாதன் பரமசிவம் தயாரித்துள்ளார். வரும் 23-ம் தேதி வெளியாகும் இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரின் மூத்த மகனும் தேமுதிக இளைஞர் அணி செயலாளருமான விஜய பிரபாகரன், சுதீஷ், நடிகர் சசிகுமார், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் ஏ.ஆர். முருகதாஸ் பேசும்போது, “ஏராளமான படங்களில் நடிகருக்கு நிகராக வில்லன்களும் அழகாக இருக்கும் டிரெண்டை செட் செய்தவர் விஜயகாந்த். அதற்குப் பெரிய நம்பிக்கை வேண்டும். விஜயகாந்த் சாருடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு இருக்கிறது. அவரின் விடாமுயற்சியும், கடின உழைப்பும் சண்முக பாண்டியனுக்கு வேண்டும். தமிழ்நாடு மக்கள் கண்டிப்பாக உங்களைக் கைவிட மாட்டார்கள். இவ்வளவு கம்பீரமான நடிகர் கிடைத்திருக்கிறார். விஜயகாந்தின் கண்கள் அப்படியே சண்முக பாண்டியனுக்கு உள்ளது. சினிமாவில் வளர்ந்து வாருங்கள். கண்டிப்பாக ‘ரமணா 2’ படம் எடுக்கலாம்” என்றார்.