சென்னை: சந்தானம் நடிப்பில் நாளை வெளிவரவுள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’படத்தில் இருந்து, சர்ச்சைக்குரிய பாடலை மியூட் செய்து நீக்கிவிட்டதாக படத் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
நடிகர் சந்தானம் நடித்துள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் நாளை (மே 16) வெளியாகிறது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள, ‘கோவிந்தா… கோவிந்தா.’ பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த பாடல், பெருமாளை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஜி.டி.பாலாஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில், “பக்தி பாடலின் வரிகளை மாற்றி, படத்துக்கு சம்பந்தமில்லாமல், பெருமாளை அவமதிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மதத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ள இந்தப் பாடலை நீக்கும்படி கூறாமல், திரைப்படத்துக்கு தணிக்கை குழு, யு/ஏ சான்று வழங்கியுள்ளது. எனவே இந்தப் படத்தின் தணிக்கைச் சான்றை நிறுத்தி வைக்க வேண்டும். இந்தப் பாடலுடன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். பாடலை நீக்க உத்தரவிட வேண்டும்,” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது படத் தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், “குறிப்பிட்ட பாடலில் ஆட்சேபம் தெரிவித்த வரிகள் நீக்கப்பட்டு, பாடல் மாற்றியமைக்கப்பட்டு, புதிய தணிக்கைச் சான்று பெறப்பட்டுள்ளது” என்று கூறினார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீசரன், “ஆனாலும், பாடலின் ட்யூன் பயன்படுத்தப்படுகிறது” என்று கூறினார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுபோனற ட்யூனை பயன்படுத்த வேண்டும் என எப்படி தோன்றியது? மற்ற மதங்களைப் பற்றி இதுபோன்ற பாடலைப் பயன்படுத்த தைரியம் உள்ளதா? எந்த மதங்களுக்கும் அவதூறு ஏற்படுத்த அனுமதிக்க முடியாது எனக் கூறி, ட்யூனை மியூட் செய்வது குறித்து விளக்கம் பெற்று தெரிவிக்க பட தயாரிப்பு நிறுவன தரப்புக்கு அறிவுறுத்தினர்.
இதையடுத்து பாடலை மியூட் செய்து நீக்கி விட்டதாக படத் தயாரிப்பு நிறுவன தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இது உண்மையா என்று நாளை (மே 16) பரிசீலனை செய்து நீதிமன்றத்தில் தெரிவிக்க மனுதார்ர் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.