சனாதன தர்மத்தை நிலைநாட்டக் கூடிய படமாகவே ‘ஹரி ஹர வீர மல்லு’ இருக்கும் என்று இயக்குநர் ஜோதி கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் அவரது மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஹரி ஹர வீர மல்லு’. ஜூன் 12-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் பவன் கல்யாண், நிதி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக கீரவாணி பணிபுரிந்துள்ளார். இதன் ‘டாரா டாரா’ பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் பவன் கல்யாண் தவிர்த்து இதர படக்குழுவினர் கலந்துகொண்டார்கள். இதில் இயக்குநர் ஜோதி கிருஷ்ணா பேசும் போது, “‘ஹர ஹர வீர மல்லு’ படத்தை இயக்கும்போது இவ்வளவு பெரிய பேன் இந்தியா படமாக வரும் என்று சிறிதும் நினைக்கவில்லை. நான் சுமார் 8 வருட காலம் படத்தை இயக்காமல் இருந்தேன். அதற்கு காரணம் அஜித் சார் என்னிடம் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை, அவரை கவனித்துக் கொள்ளுங்கள். தயாரிப்பு வேலைகளை பாருங்கள் அது உங்களுக்கு நன்றாக வரும் என்று சொன்னதே.
எவ்வளவு பெரிய ஸ்டார் நம்மைப் பற்றியும் நமது அப்பாவை பற்றியும் சிந்திக்கிறார் என்று அன்றோடு இயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தேன். ஆனால் தயாரிக்க வேண்டும் என்றால் அடுத்தடுத்து படங்கள் வேண்டும் என்றேன். நான் நடிக்கிறேன் என்று தொடர்ந்து மூன்று படங்கள் கொடுத்தார், ‘ஆரம்பம்’, ‘என்னை அறிந்தால்’ மற்றும் ‘வேதாளம்’. ஆனால், இதன் பிறகு அவர் சூர்யா மூவிஸ் மூவிஸ்க்கு நடிப்பாரா என்று தெரியவில்லை. ஆனாலும், அவர் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் அதை காப்பாற்றுவார்.
எட்டு வருடங்கள் கழித்து பவன் சாரை சந்தித்தேன். அவர் என்னிடம் எனக்கு ரத்னம் சார் ரொம்ப ரொம்ப பிடிக்கும். நீ என்ன செய்வாய் என்று எனக்கு தெரியாது எப்படியாவது இந்த படத்தை வெற்றி படமாக ஆக்க வேண்டும் என்று கூறினார். பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாரும் என் மீதும் அப்பா மீதும் வைத்திருக்கும் அன்பை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேசமயம் என் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதற்காக நாம் நிச்சயம் வெற்றி அடைய வேண்டும் என்று ஒவ்வொரு நொடியும் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
பவன் கல்யாண் சார் மிகவும் புத்திசாலி தனிப்பட்ட இயக்குநரும் கூட. அவர் அரசியல் பொது சேவையில் ஈடுபட்டதால் அவருக்கு இயக்குவதற்கான போதுமான நேரம் இல்லை. ஆனால் இந்த படத்தை இந்தியா முழுக்க கொண்டு சேர்க்க வேண்டும் என்று கடினமாக உழைத்து இருக்கிறார். நீங்கள் பார்த்த அசுரனா சாங் பாடலுக்கு அவரே நடனம் மற்றும் சண்டை காட்சிகளை இயக்கினார். சண்டை காட்சிகள் மட்டுமே 60 நாட்கள் எடுத்திருக்கிறோம்.
பவன் சாருக்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரியும். அதை வைத்து இந்தப் படத்தில் மிகப் பெரிய சாதனை நிகழ்த்தி இருக்கிறார். இந்த படம் 16-ம் நூற்றாண்டு முகலாயப் பேரரசு அவுரங்கசீப்பின் காலகட்டத்தில் நடக்கும் கதை. பாபி தியோல் அவுரங்கசீப்பாக நடித்திருக்கிறார்.
பவன் கல்யாண் சார் நம்முடைய பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அழிக்கக் கூடாது என்பதற்காக எவ்வாறு போராடுகிறார் என்பதை படத்தின் கதை. இந்த கதை எழுதி இரண்டு வருடங்களுக்குப் பிறகு பவன் கல்யாண் சார் துணை முதலமைச்சர் ஆகிறார். அப்போது திருப்பதி சம்பவத்தில் சனாதன தர்மத்தை நிலை நாட்ட குரல் கொடுக்கிறார். இந்த படமும் சனாதன தர்மத்தை நிலை நாட்டக் கூடிய ஒரு படம் தான்.
பவன் சாரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். யாராவது ஒருவர் பிரச்சினையோடு வந்தால் மற்றவர் பிரச்சினையை தன் பிரச்சினையாக பார்த்து அதை தீர்ப்பார். படப்பிடிப்பு இருக்கும்போது அரசியல் சேவைகளையும் பார்த்துக் கொண்டு இடைவிடாமல் நடித்து விட்டுச் செல்வார். ஒவ்வொரு காட்சிகளையும் 5 கேமராவை வைத்து படமாக்கினோம்.
இந்தியாவில் உலகத்தில் உள்ள அனைத்து கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தையும் இதில் பயன்படுத்தி இருக்கிறோம். கிட்டத்தட்ட 1000 பேர் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படம் வரும்போது இந்த தொழில்நுட்ப வேலைகளுக்காக தான் இவ்வளவு வருடங்கள் ஆனது என்று எல்லோருக்கும் தெரியும். அதிலும் கடைசி 15 நிமிடங்கள் யாரும் இதுவரை எதிர்பார்க்காத காட்சிகளாக இருக்கும்.
நிதி அகர்வால் இப்படத்தில் ஆரம்பத்தில் நடிக்கும் போது சிறிது பதற்றமாக இருந்தார். ஆனால் ஒரு காட்சியில் இவர் எதிர்பாராத விதமாக நிஜகத்தியை வைக்கும் போது பயந்துவிட்டார். அந்த காட்சி படத்தில் யதார்த்தமாக அற்புதமாக வந்திருக்கிறது. நாசர் சாருக்கு நன்றி, சத்யராஜ் சாருக்கும் நன்றி.
நான் சத்யராஜ் சாருடைய மிகப்பெரிய ரசிகன். அவர் எம்ஜிஆர் மாதிரி நடிக்கும் பாணி எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை நான் எப்போதும் கதாநாயகனாக தான் பார்ப்பேன். சோபி அருமையாக நடனக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
ஜூன் 12ஆம் தேதி படம் வெளியாகிறது. அதற்கு பிறகு இந்தியாவில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை இப்படம் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த படம் வெளியானதும் விரைவில் இதனுடைய 2-ம் பாகமும் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் ஜோதி கிருஷ்ணா.