‘சித்தாரே ஜமீன் பர்’ படத்தின் தமிழ் பதிப்புக்காக சிவகார்த்திகேயனிடம் மன்னிப்புக் கேட்டு தொலைபேசியில் பேசியிருக்கிறார் ஆமிர்கான்.
ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் ஆமிர்கான், ஜெனிலியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சித்தாரே ஜமீன் பர்’. இந்தியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது இதன் வரவேற்பைத் தொடர்ந்து இப்படத்தின் பின்னணியில் என்ன நடந்தது என்பதை பேட்டியொன்றில் விவரித்துள்ளார் ஆமிர்கான்.
அப்பேட்டியில் ஆமிர்கான், “’லால் சிங் சத்தா’ படத்தின் தோல்விக்குப் பின் உடைந்து போய்விட்டேன். ஆகையால் நடிப்பிலிருந்து பிரேக் எடுக்க விரும்பினேன். இது தொடர்பாக இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னாவிடம் கூறினேன். முதலில் என் முடிவில் மிகவும் ஏமாற்றமடைந்தார். பின் புரிந்துக் கொண்டார்.
ஒரு நடிகராக எனது சூழலை புரிந்துக் கொண்டு, தயாரிப்பாளராகத் தொடரச் சொன்னார். அதற்கு ஒப்புக் கொண்டேன். பின்னர் ஃபர்ஹான் அக்தர் மற்றும் சிவகார்த்திகேயன் என இருவரிடம் இப்படத்தில் நடிக்க பேசினோம். இந்தி மற்றும் தமிழில் எடுக்க திட்டமிட்டு, படப்பிடிப்பு தேதிகளை வாங்கினோம். அவர்களுக்கு இதன் கதை மிகவும் பிடித்திருந்தது.
பிரசன்னா மற்றும் படத்தின் எழுத்தாளர் திவ்யா இருவருடன் இணைந்து திரைக்கதையை இறுதி செய்யும் வேலையில் பணிபுரிந்தேன். அந்த விவாதத்தின் போது தான் நாம் ஏன் இந்தப் படத்தில் நடிக்கக் கூடாது என தோன்றியது. அந்தளவுக்கு எனக்கு இக்கதை பிடித்திருந்தது. முதலில் இக்கதைக்கு நீங்கள் தான் நாயகன் என்று முடிவு செய்திருந்ததால், இப்போது கூட எனக்கு ஒகே தான் என்று ஆர்.எஸ்.பிரசன்னா ஒப்புக் கொண்டார்.
பின்னர் ஃபர்ஹான் அக்தர் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரிடமும் தொலைபேசி வாயிலாக பேசி மன்னிப்புக் கோரினேன். இருவரிடமும் என்ன நடந்தது என்பதை தெளிவுப்படுத்தினேன். அவர்களுக்கு முதலில் ஏமாற்றமாக இருந்தாலும் பின்னர் எனது சூழலை புரிந்துக் கொண்டார்கள்.” என்று பேசியுள்ளார் ஆமிர்கான்.