சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தை மலையாளத்தில் கவனம் ஈர்த்த ‘2018’ இயக்குநர் ஜூடு ஆண்டனி ஜோசப் இயக்கவுள்ளார். மலையாளம் மட்டுமன்றி அனைத்து மொழிகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘2018’.
இதன் இயக்குநர் ஜூடு ஆண்டனி ஜோசப் அடுத்ததாக லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமானார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நாயகர்கள் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானாலும், எதுவுமே ஒப்பந்தம் ஆகாமல் இருந்தது.
தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் ஜூடு ஆண்டனி ஜோசப். இதில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. தற்போது இந்தக் கூட்டணி படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தற்போது சுதா கொங்காரா இயக்கி வரும் ‘பராசக்தி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். அதனைத் தொடர்ந்து ‘குட் நைட்’ இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார். இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு ஜூடு ஆண்டனி ஜோசப் படத்தினைத் தொடங்குவார் என தெரிகிறது.