விக்ரன் நடிக்கும் 63வது படத்தை புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்க உள்ளார்.
’வீர தீர சூரன்’ படத்துக்குப் பிறகு நடிக்ர் விக்ரம் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். ’மெய்யழகன்’ பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் பல்வேறு காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டதாக தெரிகிறது. அதே போல ‘மண்டேலா’ இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் பின்னர் அப்படம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதனால் விக்ரமின் அடுத்த படம் என்ன என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில் விக்ரம் நடிக்க உள்ள 63-வது படத்தை அருண் விஷ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதனை போடி ராஜ்குமார் என்ற புதுமுக இயக்குநர் இயக்க உள்ளார். இவர் இதற்கு எந்த இயக்குநரிடம் உதவியாளராக பணியாற்றியதில்லை என்று கூறப்படுகிறது. ’சீயான் 63’ என்று அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தினை முடித்துவிட்டு, விஷ்ணு எடவன் இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் விக்ரம். இப்படத்தினை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

