லெஜண்ட் சரவணன் நடிக்கவுள்ள புதிய படத்தை தீபாவளிக்கு வெளியிடும் முனைப்பில் இருக்கிறது படக்குழு.
’தி லெஜண்ட்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன். அடுத்ததாக துரை செந்தில்குமார் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து சரவணன், “என்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படப்பிடிப்பும், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறைவடையும்.
தீபாவளிக்கு உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், த்ரில் என அனைத்து சுவாரசிய அம்சங்களும் நிறைந்து இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் இப்படம் இருக்கும். டைட்டிலும் மாஸாக இருக்கும். ஒரு புதிய ஜானரில் இப்படம் அனைவரையும் கவரும். படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும். மொத்தத்தில் இந்த தீபாவளி நம்ம தீபாவளியாக, அனைவரின் தீபாவளியாக இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து இப்படத்தினை துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார். இதில் பிரபல பாலிவுட் நடிகையான பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா, பாகுபலி பிரபாகர், சந்தோஷ் பிரதாப், பேபி இயல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இசையமைப்பாளராக ஜிப்ரான், ஒளிப்பதிவாளராக எஸ்.வெங்கடேஷ், எடிட்டராக பிரதீப் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள்.