‘த்ரிஷ்யம்’ தமிழ் ரீமேக்கில் முதலில் ரஜினி தான் நடிப்பதாக இருந்தது என்று இயக்குநர் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதன் 2-ம் பாகமும் வெளியாகி கொண்டாடப்பட்டது. தற்போது 3-ம் பாகத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் தொடங்கவுள்ளது.
தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ‘த்ரிஷ்யம்’ ரீமேக் செய்யப்பட்டது. இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் முன்னிட்டு இயக்குநர் ஜீத்து ஜோசப் பேட்டியொன்று அளித்துள்ளார். அப்பேட்டியில், “‘த்ரிஷ்யம்’ படத்தை ரஜினி சார் மற்றும் கமல் சார் இருவரும் பார்த்தார்கள். ரஜினி சார் அவருடைய வீட்டில் படம் பார்த்துவிட்டு ஒரு அரை மணி நேரம் அமைதியாக இருந்தார்.
பின்பு படம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. ஒரே விஷயம் தான், காவல்துறையினர் என்னை தாக்குவது மாதிரியான காட்சியை மக்கள் எடுத்துக் கொள்வார்களா என்பது தான் என்று வெளிப்படையாக கூறினார். அந்த வேளையில் கமல் சார் படம் பார்த்து, ‘ஒகே’ என்று சொல்லிவிட்டதால், அதற்கான பணிகளை தொடங்கிவிட்டோம்.
சில நாட்கள் கழித்து சுரேஷ் சாருக்கு ரஜினி சார் பேசினார். ‘எனது நண்பர் ஒருவர் இப்படத்தில் என்னை நடிக்கச் சொன்னார். நான் ரெடி’ என்று தெரிவித்தார். அப்போது கமல் சார் நடிக்கவிருப்பதாக சொன்னவுடன் ‘ஒகே… ஆல் தி பெஸ்ட்’ என்று கூறினார்.” என்று ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார்.