ஒரு ஏழைக் குடும்பம் சிட்டுக் குருவி போல பல ஆண்டுகளாகச் சேமித்த ஒரு லட்சம் ரூபாயை ஒரு டப்பாவில் போட்டு மண்ணில் புதைத்து வைத்தது.
பின்னர் ஒரு தேவைக்காக அதை எடுத்துப் பார்த்த குடும்பத்தினர், பணம் முழுவதையும் கரையான் அரித்ததைக் கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

உழைப்பால் சேமித்த பணத்தைக் கரையான் அரித்துவிட்ட துயரத்தில் அந்தக் குடும்பம் கண்ணீர் விட்டு அழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவின.
இந்த நிலையில், அந்த வீடியோவைக் கண்ட நடிகர் ராகவா லாரன்ஸ், அந்தக் குடும்பத்தை நேரில் அழைத்து, ரூ. 1 லட்சம் வழங்கி நெகிழ வைத்திருக்கிறார்.
இது தொடர்பான வீடியோவை லாரன்ஸ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஷேர் செய்து, “ஒரு கூலித் தொழிலாளி குடும்பம் தங்கள் பல வருட சேமிப்பில் சேர்த்த ஒரு லட்ச ரூபாயைக் கரையான் அரித்த செய்தியைக் கேள்விப்பட்டேன்.
அவர்கள் என்ன கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதை நினைத்து என் இதயம் பதறிப் போனது. அதனால், அவர்கள் இழந்த பணத்தை அவர்களுக்கு வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தச் செய்தியை எனக்குக் கொண்டு வந்த ஊடகங்களுக்கும், அதில் ஈடுபட்ட மக்களுக்கும் நன்றி.” என்று பதிவிட்டிருக்கிறார்.