‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு மட்டும் சுமார் ரூ.20 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.
ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் ஆந்திர மாநில துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஹரி ஹர வீர மல்லு’. ஜூன் 12-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
இதனிடையே இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு மட்டுமே ரூ.20 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தெரிவித்திருக்கிறார். இக்காட்சியில் உள்ள கிராபிக்ஸ் பணிகளை ‘பாகுபலி’, ‘ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் ‘2.0’ ஆகிய படத்தில் பணிபுரிந்த நிறுவனங்கள் பணியாற்றி வருவதாக கூறியிருக்கிறார். இதன் மூலம் இக்காட்சி பிரம்மாண்டமாக இருப்பது உறுதியாகி இருக்கிறது.
ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் ஜோதி கிருஷ்ணா மற்றும் க்ரிஷ் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள படம் ‘ஹரி ஹர வீர மல்லு’. இதில் பவன் கல்யாண், பாபி தியோல், நிதி அகர்வால், சத்யராஜ், நர்கீஸ் பக்ரி, அனுஷ்யா பரத்வாஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்துக்கு கீரவாணி இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.