‘பிச்சைக்காரன் 3’ திரைப்படம் எப்போது தொடங்கும் என்பதற்கு விஜய் ஆண்டனி பதிலளித்துள்ளார்.
லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மார்கன்’. இதனை தமிழகம் முழுக்க பேருந்தில் சுற்றுப் பயணம் செய்து விளம்பரப்படுத்தி வருகிறார் விஜய் ஆண்டனி. இப்படம் ஜூன் 27-ம் தேதி வெளியாகவுள்ளது.
‘மார்கன்’ விளம்பரப்படுத்தும் பேட்டியில், ‘பிச்சைக்காரன் 3’ குறித்து விஜய் ஆண்டனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “‘பிச்சைக்காரன் 3’ கதையினை இப்போது கூட என்னால் சொல்ல முடியும். முதல் பாகம் மற்றும் 2-ம் பாகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். விரைவில் அப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும். 2027-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு ‘பிச்சைக்காரன் 3’ வெளியாகும்” என்று பதிலளித்துள்ளார் விஜய் ஆண்டனி.
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘பிச்சைக்காரன்’. அதன் 2-ம் பாகத்தினை விஜய் ஆண்டனியே இயக்கி, தயாரித்து, இசையமைத்து நாயகனாகவும் நடித்தார். அப்படமும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ‘பிச்சைக்காரன் 3’ படத்தினை அவரே தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.