‘பிரேமலு’ இயக்குநர் அடுத்து இயக்கவுள்ள படத்தின் நாயகனாக நிவின் பாலி நடிக்கவுள்ளார்.
கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘பிரேமலு’. பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் கொண்டாடப்பட்டது. இதன் இயக்குநர் க்ரிஷ் ஏடி அடுத்து இயக்கவுள்ள படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவானது. இடையே ‘பிரேமலு 2’ படத்துக்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.
இறுதியாக, தனது அடுத்த படத்தை முடிவு செய்துள்ளார் க்ரிஷ் ஏடி. நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார் க்ரிஷ் ஏடி. இப்படத்தினை ஃபஹத் பாசில், திலிஷ் போத்தன் மற்றும் ஷ்யாம் புஷ்கரண் இணைந்து தயாரிக்கவுள்ளனர். முழுக்க காதலை மையப்படுத்தி இப்படம் தயாராகவுள்ளது.
ஒளிப்பதிவாளராக அஜ்மல் சாபு, இசையமைப்பாளராக விஷ்ணு விஜய், எடிட்டராக ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். விரைவில் படப்பிடிப்பை தொடங்கி ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படத்தையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.