சென்னை: “என்னை தவறாக சித்தரிக்கும் சில ஏஐ படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. இந்தப் போலியான காட்சிகளைப் பகிர்வதை, தயவு செய்து நிறுத்துங்கள்” என நடிகை பிரியங்கா மோகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கன்னடத்தில் வெளியான ‘ஒந்தெ கதே ஹெல்லா’ படம் மூலம் அறிமுகமான பிரியங்கா மோகன், தமிழில் சிவகார்த்திகேயனுடன் ‘டாக்டர்’ படம் மூலம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தவர். அண்மையில் வெளியான பவன் கல்யாணின் ‘ஓஜி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், ‘ஓஜி’ படத்தின் ஒரு பாடல் காட்சியில் இடம்பெறுவதாக சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அந்தப் புகைப்படங்கள் இருப்பது தான் அல்ல என்று பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “என்னை தவறாக சித்தரிக்கும் சில ஏஐ (AI) படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. இந்தப் போலியான காட்சிகளைப் பகிர்வதை, பரப்புவதை தயவு செய்து நிறுத்துங்கள். ஆக்கபூர்வமான படைப்பாற்றலுக்காக ஏஐ பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, தவறான விஷயங்களுக்கு பயன்படுத்தக் கூடாது. எதை உருவாக்குகிறோம், எதைப் பகிர்கிறோம் என்பதில் நாம் கவனமாக இருப்பது அவசியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.