பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் கபூர் என்பவரை 2003-ம் ஆண்டு மிகவும் ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டார். இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் அத்திருமணம் இருந்தது. பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தபோதும் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் இருவரும் சண்டையிட்டு பிரிந்தனர்.
இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. கணவர் சஞ்சய் கபூர் குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாகவும், மகனுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தபோது இங்கிலாந்தில் போலோ விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்ததாகவும் நடிகை கரிஷ்மா கபூர் குற்றம் சாட்டி இருந்தார். இவர்களது விவாகரத்து வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. இறுதியில் இரண்டு குழந்தைகளையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட கரிஷ்மா கபூருக்கு ஒரே தவணையாக சஞ்சய் கபூர் ரூ.70 கோடி கொடுத்தார். அதோடு தனது இரண்டு குழந்தைகளின் படிப்புக்காக மாதம் ரூ.10 லட்சம் கிடைக்கும் வகையில் ரூ.14 கோடிக்கு டெபாசிட் பத்திரம் வாங்கிக்கொடுத்துள்ளார். மேலும் மும்பையில் ஒரு வீடும் கொடுத்தார்.

சஞ்சய் கபூர் ரூ.30 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஆட்டோமொமைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் சோனா கோம்ஸ்டர் நிறுவனத்தின் தலைவராக இருந்தார். அதோடு போலோ விளையாட்டையும் மிகவும் விரும்பினார். அவர் சிறந்த போலோ விளையாட்டு வீரராகவும் இருந்தார். அவர் லண்டனில் போலோ விளையாடிக்கொண்டிருந்தபோது அவரது வாயில் தேனீ ஒன்று புகுந்ததால் மாரடைப்பு ஏற்பட்டு அகால மரணமடைந்தார்.
அவரது மரணத்தால் அவரது ரூ.30 ஆயிரம் கோடி கம்பெனியின் வாரிசு யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் கரிஷ்மா கபூரின் இரண்டு வாரிசுகளான சமைரா மற்றும் கியான் ஆகிய இரண்டு பேருக்கும் ரூ.30 ஆயிரம் கோடி சொத்தில் பங்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் கரிஷ்மா கபூருக்கு இந்த சொத்தில் சிறிதும் கிடைக்காது என்று சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அதே போன்று கரிஷ்மா கபூரின் குழந்தைகளுக்கும் இறந்து போன சஞ்சய் கபூரின் சொத்தில் எந்த வித உரிமையும் இருக்காது என்றும், அதில் அவர்களுக்கும் பங்கு கிடைக்காது என்றும் கூறப்படுகிறது.