உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடித்துள்ள படம், ‘அக்யூஸ்ட்’. பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கிய இதில் கன்னட நடிகை ஜான்விகா உள்பட பலர் நடித்துள்ளனர். நரேன் பாலகுமார் இசையமைத்துள்ளார். உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்த இந்தப் படம் ஆக.1-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன், அழகன் தமிழ்மணி, சவுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
நடிகர் உதயா பேசுகையில், “இந்தப் படம் திரையரங்கில் மூன்றாவது வாரமாக, ஓடிக் கொண்டிருக்கிறது. திரைத்துறையில் சூழ்ச்சி, பகைமை என பல விஷயங்கள் இருக்கின்றன. ஒரு படத்தை வர விடக்கூடாது என தடுக்கிறார்கள். அதையும் கடந்து இந்தப் படம் வெளியாகி வெற்றி பெற்று இருக்கிறது என்றால், அதற்கு மக்கள் காரணம். சினிமாவில் எந்த சங்கமாக இருந்தாலும் அவை உறுதியாக இருக்க வேண்டும். ஏனெனில் தமிழ் சினிமா ‘மோனோபோலி’யாக இருக்கிறது. நான் இதை உறுதியாகச் சொல்கிறேன். இதில் நாம் வெற்றி பெறுவது என்பது கடினம்.
இத்தனை ஆண்டுகால சினிமா அனுபவம் கொண்ட எங்களுக்கே இப்படி ஏற்படுகிறது என்றால், புதிதாக வரும் தயாரிப்பாளர்கள் நிலையை நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சுயநலம் அதிகம் இருக்கிறது. அங்கு ஆற்றல்மிக்க அணி உருவாக வேண்டும். இந்த ‘அக்யூஸ்ட்’ படத்தின் டீம் மீண்டும் இணைந்து பணியாற்றத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.