மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்திலும் சிம்பு நாயகனாக நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அபிராமி, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை பல்வேறு மொழிகளில் விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு. ‘தக் லைஃப்’ படத்தைத் தொடர்ந்து புதுமுகங்களை வைத்து காதல் கதையொன்றை மணிரத்னம் இயக்கவிருப்பதாக தகவல் வெளியானது.
இதனை மணிரத்னம் பேட்டியொன்றில் மறுத்திருந்தார். தற்போது மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் சிம்பு நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. முழுக்க காதலை மையாக கொண்டு உருவாகும் இப்படத்தின் நாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு உடனே தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
‘செக்க சிவந்த வானம்’ படத்திலேயே மணிரத்னம் – சிம்பு கூட்டணி இணைந்து பணிபுரிந்திருக்கிறது. ஆனால், மணிரத்னம் இயக்கத்தில் தனி நாயகனாக சிம்பு நடிக்கும் முதல் படமாக இது உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.