தமிழ் சினிமாவில் சுமார் இருநூறு படங்களுக்குத் திரைக்கதை, நாற்பது படங்களுக்குக் கதை எழுதிய கலைஞானம், 18 படங்களைத் தயாரித்தும் இருக்கிறார். சாண்டோ சின்னப்பா தேவரின் நிறுவனத்துக்குத் தொடர்ச்சியாக எழுதி வந்த அவரிடம், படம் தயாரிக்கச் சொன்னார், தேவர். தான் ஃபைனான்ஸ் செய்வதாகவும் சொன்னார்.
இதையடுத்து தயாரிப்பில் இறங்கிய கலைஞானம், அதற்காக ‘விஸ்வரூபம்’ என்ற கதையை எழுதினார். அண்ணன் – தங்கை பாசத்தை வைத்து எழுதிய கதை இது. சிறு வயதில் விபத்து ஒன்றில் பிரிந்து விடுகிறார்கள் அண்ணனும், தங்கையும். அண்ணன் தங்கையைத் தேடி அலைகிறான். ஒரு பணக்காரரின் மனைவி அண்ணனை வளர்க்கிறார். அவர்களுக்கு ஏற்கெனவே ஒரு மகன் இருக்கிறான்.
அந்த மகனின் தீய செயல்களுக்குத் துணை போகும் அவன், ஒரு முறை ஒரு பெண்ணை கடத்துகிறான். பணக்காரரின் மகன், அவளை பாலியல் வன்கொடுமை செய்கிறான். தான் கடத்தி வந்தது தனது தங்கை என தெரிகிறது, பண்ணையார் வீட்டில் வளரும் அண்ணனுக்கு. தனது தங்கையை திருமணம் செய்துகொள்ளும்படி பண்ணையார் மகனிடம் கெஞ்சுகிறான் அண்ணன். மறுக்கிறான் அவன். தங்கை இறந்துவிட, பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.
தங்கையை மையப்படுத்திய கதை என்பதால் ‘பைரவி’ என்ற தங்கை கதாபாத்திரத்தின் பெயரை டைட்டிலாக மாற்றினார்கள். அப்போது வில்லனாக நடித்துக் கொண்டிருந்தார் ரஜினி. கலைஞானம் கதை எழுதிய ‘ஆறு புஷ்பங்கள்’ படத்தில் ரஜினி 2-வது ஹீரோவாக நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவருடைய ஸ்டைல் பிடித்துவிட்டதால் அவரை ஹீரோவாக்க முடிவு செய்தார், கலைஞானம். அந்த காலகட்டத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீகாந்தை, வில்லனாக நடிக்க வைக்கவும் பேசிவிட்டார்.
புதுமுகங்களை ஹீரோவாக நடிக்க வைப்பதில்லை என்ற எண்ணம் கொண்ட சாண்டோ சின்னப்பா தேவருக்கு, ரஜினியை ஹீரோவாக்கியது பிடிக்கவில்லை. ரஜினியை, வில்லன் வேடத்தில் நடிக்கச் சொன்னார் அவர். கலைஞானம் மறுத்ததும் பைனான்ஸ் தர மறுத்துவிட்டார் தேவர். பின்னர் அப்போது பிரபல விநியோகஸ்தர்களாக இருந்த காதர் (நடிகர் ராஜ்கிரண்), உடந்தை மணாளன் உள்ளிட்ட சிலர் கொடுத்த அட்வான்ஸை வைத்துப் படத்தைத் தொடங்கினார். ஸ்ரீதரிடம் உதவி இயக்குநராக இருந்த எம்.பாஸ்கரை, இயக்குநர் ஆக்கினார் கலைஞானம்.
முதலில் வில்லன் போல தோன்றி பின்பு நல்லவனாகும் கதாபாத்திரத்தில் ரஜினியின் நடிப்பு பேசப்பட்டது. அவரது தோற்றமும் சென்டிமென்ட் காட்சிகளும் ரசிகர்களைக் கவர்ந்தன. இதில் பைரவியாக நடித்தவர், கீதா. அவருக்கு இதுதான் அறிமுகப் படம். ஸ்ரீப்ரியா, வி.கே.ராமசாமி, சுருளி ராஜன், சுதீர், மனோரமா, ஒய்.விஜயா, டி.கே.ராமச்சந்திரன், கே.நட்ராஜ் என பலர் நடித்தனர். நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த சுருளிராஜன் இதில் குணசித்திர வேடத்தில் நடித்தார்.
மதுரை திருமாறன் திரைக்கதை எழுதினார். இளையராஜா இசையில், ‘கட்ட புள்ள குட்டபுள்ள’, ‘நண்டூருது நரியூருது நான் வளர்த்த செல்லக்கிளி’, ‘ஏழு கடல் நாயகியே’ ஆகிய பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.
படம் வெளியான நேரத்தில் சென்னை பிளாசா தியேட்டரில், ரஜினிக்கு 35 அடியில் பிரம்மாண்ட கட் அவுட் வைத்தார் சென்னை விநியோகஸ்தரான கலைப்புலி எஸ். தாணு. அதில் ‘சூப்பர் ஸ்டார் ரஜினி’ என்ற பட்டத்தையும் அவர் கொடுத்திருந்தார். 1978-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி வெளியாகி வெற்றி பெற்ற, ‘பைரவி’, தமிழ் சினிமாவுக்கு ஒரு சூப்பர் ஸ்டாரை உருவாக்கித் தந்தது.