பிரபல மூத்த ஒளிப்பதிவாளர் பாபு (வயது 88), சென்னையில் நேற்று காலமானார்.
1970 மற்றும் 1980-களின் முன்னணி ஒளிப்பதிவாளராக இருந்தவர் பாபு. எஸ்.பி.முத்துராமன் இயக்கிய 45 படங்களுக்கு இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். தெலுங்கு, கன்னடம், இந்தியிலும் பணியாற்றியுள்ளார்.
ரஜினிகாந்த் நடித்த ‘பிரியா’, ‘முரட்டுக்காளை’, ‘ஸ்ரீராகவேந்திரா’, ‘ஆறிலிருந்து அறுபதுவரை’, ‘நல்லவனுக்கு நல்லவன்’, ‘பாயும் புலி’, ‘புதுக்கவிதை’, ‘கழுகு’, ‘போக்கிரி ராஜா’, கமல்ஹாசன் நடித்த ‘சகலகலா வல்லவன்’, ‘தூங்காதே தம்பி தூங்காதே’ உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கடைசியாக 2001-ம் ஆண்டு வெளியான ‘தாலி காத்த காளி அம்மன்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்.
சென்னை, அபிராமபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த அவருக்கு, உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவர் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த பாபுவுக்கு விஷ்வநாத், ஸ்ரீதர் என்ற இரு மகன்கள் உள்ளனர். இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது.