ரவி மோகன் தயாரித்து நடிக்கும் படத்துக்கு ‘ப்ரோகோட்’ என தலைப்பிட்டு இருக்கிறார்கள். ‘டிக்கிலோனா’ மற்றும் ’வடக்குப்பட்டி ராமசாமி’ ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் யோகி. இந்தப் படங்களைத் தொடர்ந்து ரவி மோகன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். தற்போது இதில் நாயகனாக நடிப்பது மட்டுமன்றி தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார் ரவி மோகன்.
‘ப்ரோகோட்’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் ரவி மோகனுடன் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதன் ஒளிப்பதிவாளராக கலைச்செல்வன் சிவாஜி, இசையமைப்பாளராக ஹர்ஷவர்தன், எடிட்டராக பிரதீப் ஈ ராகவன், கலை இயக்குநராக ஏ.ராஜேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இப்படம் குறித்து கார்த்திக் யோகி கூறும்போது, “இப்படத்தின் கதையை ரவி மோகனிடம் விவரித்த போது மிகவும் ரசித்தார். அத்துடன் படத்தை தயாரிக்கவும் முன்வந்தார். இப்படத்தில் ஸ்லாப்ஸ்டிக் பாணியிலான நகைச்சுவை காட்சிகள் இடம்பிடித்திருக்கிறது. இந்தப் படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.
முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படம் உருவாகிறது. செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இப்படத்தில் ரவி மோகனுக்கு நாயகியாக 4 நடிகைகள் நடிக்கவுள்ளனர். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.