ஆசிஷ் கவுரிகர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் ரிஷப் ஷெட்டி.
‘லகான்’, ‘ஸ்வதேஷ்’, ‘ஜோதா அக்பர்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஆசிஷ் கவுரிகர். இவர் அடுத்து இயக்கவுள்ள படத்தில் நாயகனாக நடிக்க ரிஷப் ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இக்கதை ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் மன்னரின் கதை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் நடிக்க ரிஷப் ஷெட்டி சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரிஷப் ஷெட்டி – ஆசிஷ் கவுரிகர் இணையும் படத்தினை பிரபல தயாரிப்பாளர் விஷ்ணு வர்தன் தயாரிக்கவுள்ளார். இவர் என்.டி.ஆர், ஜெயலலிதா மற்றும் கபில் தேவ் உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாற்று படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
தற்போது ‘காந்தாரா 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரிஷப் ஷெட்டி. அக்டோபர் 2-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து ‘ஜெய் ஹனுமன்’ படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார் ரிஷப் ஷெட்டி.