‘லப்பர் பந்து’ படத்தை இந்தியில் ஷாரூக்கான் ரீமேக் செய்ய விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘லப்பர் பந்து’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் இப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டி இருந்தார்கள். இதன் மூலம் இயக்குநராக அறிமுகமானார் தமிழரசன் பச்சமுத்து.
தற்போது ‘லப்பர் பந்து’ படத்தை ஷாரூக்கான் இந்தியில் ரீமேக் செய்ய விருப்பம் தெரிவித்திருப்பதாக ஸ்வாசிகா அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் தனது கதாபாத்திரத்தில் தானே நடிக்க வேண்டும் என்று ஷாரூக்கான் கூறியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் இந்தியில் ‘லப்பர் பந்து’ விரைவில் ரீமேக் ஆகவிருப்பது உறுதியாகி இருக்கிறது.
தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வாசிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘லப்பர் பந்து’. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.