சிவகங்கை அருகே காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் மரணமடைந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குநர் அமீரும் அஜித்குமாரின் மரணம் குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், “காவல்துறை என்பது முழுக்க முழுக்க மக்கள் பக்கம் இல்லை என்று பல நூறு முறை சொல்லி இருக்கிறேன். அது அதிகாரத்தின் பக்கம்தான் நிற்கும். செல்வந்தர்கள் பக்கம்தான் நிற்கும். அப்படிதான் நின்றிருக்கிறது. அதுதான் வரலாறு.
எங்கேயாவது ஒன்று இரண்டு சூழல்களில் அவர்கள் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு பயந்து மக்கள் பக்கம் நிற்பார்கள். பொதுவாக யாருக்கு கட்டுப்படுவார்கள் என்றால் தனக்கு மேல் இருக்கும் அதிகாரிகளுக்குத்தான். அந்த அதிகாரி தனக்கு மேல் இருக்கக்கூடிய அதிகாரிகளுக்கு கட்டுப்படுவார். இதுதான் காவல்துறையின் கட்டமைப்பு.
இதில் யாரையும் குறை சொல்வதற்கில்லை. இந்த சிறப்புப் படை உள்ளே வந்து நுழைந்து அடிக்கிறார்கள் என்றால் வெறுமனே அப்படி செய்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு யாரோ அறிவுறுத்தியிருக்கிறார். அவர் யாரு? விவசாயப் போராட்டம் நடைபெறுகிறது என்றால் அதில் தடியடி நடக்கும்.
அந்த தடியடியை நடத்துகிறவர் யாராக இருப்பார்கள் என்றால் ஒரு விவசாயி மகனாக இருப்பான். அவர் கிராமத்தில் இருந்து போலீஸ் வேலைக்கு வந்தவராக இருப்பார். எனது அதிகாரி சொன்னார் அதனால்தான் நான் அடித்தேன் என்பார்.

ஒரு அதிகாரி சொன்னாலும் அடித்தால் நம்முடைய வேலை பறிபோகும் என்பதை இந்த திருப்புவனம் சம்பவம் காவலர்களுக்கு உணர்த்தியிருக்கிறது. இந்த ஆட்சியில், அந்த ஆட்சியில் என்று இல்லை. எல்லா ஆட்சியிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.
எந்த ஆட்சி வந்தாலும் இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும். உலகம் முழுவதும் இந்த சம்பவங்கள் நடைபெறுகிறது. லாக்அப் மரணம் என்பது திராவிடக் கட்சிகளின் கொள்கையா? அல்லது காவல்துறையின் கௌரவமா? அதுதான் என்னுடைய கேள்வி” என்று பேசியிருக்கிறார்.