மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்கள் தாங்கள் நடித்து சம்பாதிக்கும் பணத்தை ரியல் எஸ்டேட் மற்றும் ரெஸ்டாரன்ட்களில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். நடிகர் அமிதாப்பச்சனும், அவரது மகன் அபிஷேக் பச்சனும் பெரிய அளவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளனர். மும்பை மட்டுமல்லாது உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியிலும் ரியல் எஸ்டேட்டில் அமிதாப்பச்சன் பெரிய அளவில் முதலீடு செய்து வருகிறார்.
ஷாருக்கான் ஏற்கனவே பல தொழில்களில் முதலீடு செய்துள்ள நிலையில், இப்போது அவரது மனைவி கெளரி கான் சொந்தமாக மும்பையில் ரெஸ்டாரன்ட் ஒன்றையும் நடத்தி வருகிறார். தோரி என்ற அந்த ரெஸ்டாரன்ட் ஷாருக்கான் வசிக்கும் பாந்த்ரா பகுதியில் செயல்படுகிறது. இந்த ரெஸ்டாரன்டிற்கு ஷாருக்கான் அடிக்கடி தனது குடும்பத்தோடு வந்து செல்வது வழக்கம். ஆனால் அவர்கள் வந்து செல்ல தனியாக ஒரு ரகசிய வாசல் இருக்கிறது.

அந்த ரகசிய வாசல் வழியாகத்தான் ஷாருக்கானும், அவரது குடும்பத்தினரும் வந்து செல்வது வழக்கம். இது குறித்து தோரி ரெஸ்டாரண்டில் தலைமை சமையல்காரராக இருக்கும் ஸ்டீபான் கூறுகையில், “‘உணவகத்தில் ரகசிய வாசல் ஒன்று இருக்கிறது. அதனை அனைவரும் பயன்படுத்த முடியாது. கான் குடும்பத்தினர் மட்டும் பயன்படுத்துவர். ஷாருக்கானின் இளைய மகன் ஆப்ராம் அடிக்கடி உணவை ஆர்டர் செய்து சாப்பிடுவார். ஆனால் ஷாருக்கானின் மூத்த மகன் ஆர்யன் கான், மகள் சுஹானா ஆகியோர் நண்பர்களுடன் உணவகத்திற்கு வருவதுண்டு. ஷாருக்கான் பெரும்பாலும் குடும்பத்தோடுதான் வருவார். ஒரு முறை ஷாருக்கானின் மேலாளர் பூஜாவின் பிறந்தநாளை இங்கு கொண்டாடினர்.
பாலிவுட் தயாரிப்பாளரும், இயக்குனருமான கரண் ஜோகர் தென்மும்பையில் நியுமா என்ற பெயரில் ஒரு ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார். பாந்த்ராவில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பாலி தாய் என்ற பெயரில் ஒரு ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார். இது தவிர கொலாபாவிலும் ஒரு ரெஸ்டாரன்ட் நடத்திக்கொண்டிருக்கிறார். நடிகை ஆயிஷா தகியா தனது கணவர் பர்ஹான் ஆஸ்மியுடன் இணைந்து கேப் பாஸிலிகோ என்ற பெயரில் ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார். நடிகை ஷில்பா ஷெட்டி பாஸ்டியன் என்ற பெயரில் நடத்தப்பட்டு வரும் ரெஸ்டாரண்டில் 50 சதவீத பங்குதாரராக இருக்கிறார்.