‘ஹரி ஹர வீரமல்லு’ படத்தில் பாபி தியோலின் கதாபாத்திரத்தை மாற்றி அமைத்திருக்கிறார் இயக்குநர் ஜோதி கிருஷ்ணா. இதற்கான காரணத்தையும அவர் விவரித்துள்ளார்.
ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யாண், பாபி தியோல், நிதி அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹரி ஹர வீரமல்லு’. ஏ.எம்.ரத்னம் தயாரித்து வரும் இப்படம் பலமுறை வெளியீட்டு தேதிகள் மாற்றியமைக்கப்பட்டது. இறுதியாக ஜூலை 24-ம் தேதி வெளியாகவுள்ளது. ஜூலை 3-ம் தேதி ‘ஹரி ஹர வீரமல்லு’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது. இதனை பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, பாபி தியோல் கதாபாத்திரத்தை முற்றிலுமாக மாற்றியமைத்திருக்கிறார் இயக்குநர் ஜோதி கிருஷ்ணா. ‘அனிமல்’ படத்தில் அவரது நடிப்பைப் பார்த்த பின்பு இந்த முடிவுக்கு வந்திருக்கிறார். இதற்காக படத்தின் எடிட்டிங் முறையையும் மாற்றியுள்ளார். இது தொடர்பாக ஜோதி கிருஷ்ணா கூறும்போது, “‘அனிமல்’ படத்தில் பாபி தியோலின் மவுன நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
சொற்கள் இல்லாமல், முகபாவனைகளின் வழியாகவே ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் பாபி தியோலின் திறமை மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால்தான், ‘ஹரி ஹர வீரமல்லு’ படத்திலும் அவரது கதாபாத்திரத்தை முழுமையாக மாற்ற வேண்டும் என முடிவு செய்தேன். புதிய கதாபாத்திர வடிவத்தை அவரிடம் சொன்னபோது மிகுந்த உற்சாகமாகிவிட்டார்.
பாபி தியோலுக்கு சவாலான வேடங்களில் நடிப்பதும், புதியதொரு வடிவில் ரசிகர்களிடம் தன்னை காண்பிப்பதும் மிகவும் பிடிக்கும். ‘ஹரி ஹர வீரமல்லு’ படத்தில் அவர் மிகுந்த தீவிரம் கொண்ட தோற்றத்தில் தோன்றுகிறார். அவரது பார்வையின் மூலம் தான் சொல்லும் உணர்வுகள், அவரது திரை தோற்றம், ஆளுமை அனைத்தும் கதையை ஒரு புதிய உயரத்துக்கு கொண்டு செல்கின்றன. அவருடன் பணியாற்றிய அனுபவம் மிக சிறப்பானது” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் ஜோதி கிருஷ்ணா.