அடுத்த ஆண்டு ‘ராட்சசன் 2’ படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
ராம்குமார் – விஷ்ணு விஷால் கூட்டணி இணைந்து ‘இரண்டு வானம்’ என்னும் படத்தில் இணைந்து பணிபுரிந்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இருவரும் இணைந்து ‘ராட்சசன் 2’ படத்தில் அடுத்த ஆண்டு பணிபுரிய இருப்பதை விஷ்ணு விஷால் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
கடந்த 2018-ம் ஆண்டு இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’ படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஹிட்டடித்தது. சைகலாஜிக்கல் – த்ரில்லர் படமான இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். முன்னதாக, ராம்குமார் – விஷ்ணு விஷால் இருவரும் இணைந்த முதல் படமான ‘முண்டாசுப்பட்டி’ படமும் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
விஷ்ணு விஷால் அவரது தம்பி ருத்ரா நடித்த ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தினை தயாரித்து, அதில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து ‘கட்டாகுஸ்தி 2’, அருண்ராஜா காமராஜ் படம் ஆகியவற்றில் நடிக்கவுள்ளார். இதனை முடித்துவிட்டு ‘ராட்சசன் 2’ தொடங்குவார் என தெரிகிறது.