‘ஜனநாயகன்’ விநியோக உரிமை விற்பனை தொடர்பாக விஜய் அதிரடி முடிவொன்றை எடுத்துள்ளார்.
விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் முடித்துவிட்டது ‘ஜனநாயகன்’ படக்குழு. இதர நடிகர்களை வைத்து சில காட்சிகள் இன்னும் படமாக்கப்பட வேண்டியதிருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 8-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை கே.வி.என் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதன் ஓடிடி உரிமையினை அமேசான் ப்ரைம், தொலைக்காட்சி உரிமையினை சன் டிவியும் கைப்பற்றி இருக்கிறது.
தற்போது இதர விநியோக உரிமைகள் வியாபாரத்தினை தொடங்க முடிவு செய்தது தயாரிப்பு நிறுவனம். இது தொடர்பாக சில முடிவுகளை தயாரிப்பு நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார் விஜய். ‘ஜனநாயகன்’ விநியோக உரிமையினை கைப்பற்றும் எந்தவொரு நிறுவனத்துக்கும் எந்தவொரு அரசியல் பின்புலமும் இருக்கக் கூடாது என்று தெரிவித்திருக்கிறார்.
இதனால் தமிழக உரிமையினைக் கைப்பற்ற முன்னணியில் இருந்த ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது பின்வாங்கி இருக்கிறது. தமிழக உரிமையினை லலித்குமாரிடம் கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. அப்படி இல்லாத பட்சத்தில் தாணுவிடம் கொடுப்பதற்கும் படக்குழு தயாராக இருக்கிறது. தமிழக உரிமை மட்டுமன்றி இதர மாநில உரிமைகளும் இதே பாணியில் தான் கொடுக்கப்பட இருக்கிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பாபி தியோல், பூஹா ஹெக்டே, கவுதம் மேனன், ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். விஜய் நடிப்பில் உருவாகும் கடைசி படம் என்பதால், இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.