இந்திய திரையுலகின் உச்சத்தை விஜய் தொட்டுவிட்டதாக கூறப்படுகிறது. ஏனென்றால், ‘ஜனநாயகன்’ படத்துக்காக அவருக்கு ரூ.250 கோடியை சம்பளமாக கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் நடிப்பில் கடைசியாக உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே பாக்கி இருக்கிறது. இதன் உரிமைகளைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. இதனிடையே, ‘ஜனநாயகன்’ படத்துக்கு விஜய்க்கு 250 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்துடன், ஜி.எஸ்.டி தொகையும் இணையும் என்பது கூடுதல் தகவல்.
இதை வைத்துப் பார்த்தால் இந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பது விஜய்தான். ஏனென்றால், முன்னணி நடிகர்கள் பலரும் சம்பளமாக ஒரு தொகையைப் பெற்றுக் கொண்டு, படத்தின் வியாபாரத்தில் இருந்து பங்கு என்றும் ஒப்பந்தம் போட்டுக் கொள்வார்கள். ஆனால், சம்பளமாக இவ்வளவு பெரிய தொகை பெற்றுள்ள முதல் நடிகர் விஜய்தான்.
இதுவே அவருடைய பெரும் வளர்ச்சியைக் காட்டுவதாக இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள். மேலும், இவ்வளவு பெரிய சம்பளம் வாங்கும் சமயத்தில்தான் ‘சினிமா வேண்டாம்’ என்று அரசியலுக்கு வந்துள்ளார் என்றும் அவரது ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். எனினும், 2026-ம் ஆண்டு தேர்தல் முடிவுகளைப் பொறுத்து மீண்டும் சினிமாவுக்கு விஜய் திரும்புவார் என்கிறது திரையுலக வட்டாரம்.