கிரிக்கெட் அணியை வாங்கிய சல்மான் கான்
நடிகர் சல்மான் கான் கார் மட்டுமல்லாது சொந்தமாக கிரிக்கெட் அணி ஒன்றையும் விலைக்கு வாங்கி இருக்கிறார். ஐ.பி.எல் போன்று ISPL எனப்படும் indian street premier leagu என்ற புதிய கிரிக்கெட் பிரிவு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் டெல்லி அணியை சல்மான் கான் வாங்கி இருக்கிறார். சச்சின் தெண்டுல்கர் தலைமையில் இந்த ஐ.எஸ்.பி.எல் அணிகள் செயல்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக டென்னிஸ் பால் டி10 போட்டிகளை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் இப்போட்டிகள் நடத்தப்பட்டுவிட்டது. அடிமட்டத்தில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்ற நோக்கதில் இந்த ஐ.எஸ்.பி.எல் தொடங்கப்பட்டுள்ளது. டெல்லியை தொடர்ந்து அகமதாபாத்திற்கும் ஒரு அணி அறிவிக்கப்பட்டு அதன் உரிமையாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று ஐ.எஸ்.பி.எல் நிர்வாக கமிட்டி உறுப்பினர் அசிஷ் ஷெலார் தெரிவித்துள்ளார்.
நடிகர் சைஃப் அலிகான் மற்றும் அவரது மனைவி கரீனா கபூர் ஆகியோர் இணைந்து கொல்கத்தா அணியை வாங்கி இருக்கின்றனர். இதே போன்று ஹ்ரித்திக் ரோஷன் பெங்களூரு அணியையும், அமிதாப் பச்சன் மும்பை அணியையும் வாங்கி இருக்கின்றனர். நடிகர் சூர்யா சென்னை லயன்ஸ் அணியையும், ராம் சரண் ஐதராபாத் அணியையும், அக்ஷய் குமார் ஸ்ரீநகர் அணியையும் விலைக்கு வாங்கி இருக்கின்றனர்.
புதிய கிரிக்கெட் அணி வாங்கி இருப்பது குறித்து சல்மான் கான் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், “‘இந்தியாவின் ஒவ்வொரு தெருவிலும் எதிரொலிக்கும் ஒரு இதயத்துடிப்பு கிரிக்கெட். அந்த ஆற்றல் மைதானத்தை அடையும் போது, ஐஎஸ்பிஎல் போன்ற லீக்குகள் பிறக்கின்றன. நான் எப்போதும் விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகிறேன். இந்த தனித்துவமான லீக் இந்தியாவில் அடிமட்ட கிரிக்கெட்டை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், திறமையான வீரர்களுக்கு ஒரு மதிப்புமிக்க தளத்தை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதால் ஐஎஸ்பிஎல்-லில் சேருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று சல்மான் கான் தெரிவித்துள்ளார்.