தமிழ் சினிமாவில் ஒரே ஆளை மட்டும் நடிக்க வைத்துப் படும் எடுப்பது, சிங்கிள் ஷாட்டில் எடுப்பது என வித்தியாசமாகத் திரைப்படங்களை எடுப்பவர் இரா. பார்த்திபன்.
30 ஆண்டுகளாக இயக்குநராகவும், நடிகராகவும் திரைத்துறையில் தனி அடையாளத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் இரா. பார்த்திபன், 54-ம் பக்கத்தில் மயிலிறகு, நான் தான் சி.எம் போன்ற படங்களைத் தனது டைரக்ஷன் லிஸ்ட்டில் வைத்திருக்கிறார்.

இவரது நடிப்பில், இட்லி கடை உள்ளிட்ட அடுத்தடுத்த படங்கள் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கின்றன.
இந்த நிலையில், இரா. பார்த்திபன் இறந்துவிட்டதாக யூடியூபில் போலி ஷார்ட்ஸ் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையறிந்த இரா. பார்த்திபன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “இதுபோன்ற செய்திகள் மரணமடைய வேண்டும்.
இதைத் தயாரிப்பவர்கள் தங்களின் வாய்க்கரிசிக்காகச் செய்தாலும் …. மற்றவர்களின் மனதைப் பிணமாக்கி அதைக் கொத்தித் திண்ணும் கேவலப் பிறவியாக வாழ வேண்டுமா? எனச் சம்மந்தப்பட்டவர்களின் குடும்பம்>>> அது தாயோ தாரமோ பெற்றதுகளோ யோசிக்க வேண்டும்.
இது பலமுறை, என்னை மட்டுமல்ல பலரையும் இறைவனடி சேர shortest route ticket வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.
அவர்களாகவே திருந்த அந்தச் சுடுகாட்டு சுடலை சாமியோ, ஆறாவது அறிவோ உதவ வேண்டும்” என்று பதிவிட்டிருக்கிறார்.