நடிகரும், சமூக சேவகருமான ராகவா லாரன்ஸ் தனது தாயார் பெயரில் எளியவர்களுக்கு அன்னதான விருந்தைத் தொடங்கியிருக்கிறார்.
இது தொடர்பாக தனது சமூக வலைத்தளப் பக்கங்களில், “என் அம்மாவின் பெயரில் என் மனதுக்கு நெருக்கமான “கண்மணி அன்னதான விருந்து’ இன்று தொடங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
வசதி படைத்தவர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய உணவுகள் எளியவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது.

அந்தப் பிம்பத்தை உடைத்து அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே கண்மணி அன்னதான விருந்தின் நோக்கம்.
உணவு என்றும் எட்டாக்கனியாக இருக்கக்கூடாது. அது ஒவ்வொருவரின் முகத்திலும் புன்னகையைத் தர வேண்டும்.
இந்தப் பயணத்தை நரிக்குறவர்கள் இன பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் தொடங்கியதில் மகிழ்ச்சி.
பல வகையான உணவுகளை அவர்கள் விரும்பி சுவைத்தது எனக்கு மனநிறைவாக இருந்தது.
உங்கள் அனைவரின் அன்புடனும் ஆசீர்வாதத்துடனும் அனைவரின் பசியையும் விருப்பத்தையும் பூர்த்தி செய்யும் இந்தப் பயணத்தை மனநிறைவுடன் தொடர்வேன் என நம்புகிறேன்” என்று லாரன்ஸ் பதிவிட்டிருக்கிறார். மேலும், அன்னதான விருந்தின் வீடியோவையும் ஷேர் செய்திருக்கிறார்.
திரைப்படங்களுக்கு அப்பால் லாரன்ஸின் இதுபோன்ற சமூக சேவைகள் குறித்த உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.