ஊர் முன்னிலையில் காதலர்களைக் காதில் பூச்சி மருந்திட்டுக் கொல்லும் காட்சி, கர்ப்பிணியான நாயகி தப்பி ஓடும் காட்சி ஆகியவை திரைக்கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டிய உணர்வுபூர்வமான இடங்கள். ஆனால் அவை சுமாரான திரையாக்கத்தால் தேவையான ஆழத்தை அடையத் தவறுகின்றன.
பழிவாங்கல் திட்டமாக, சாதித் தூய்மையை அழிக்க, நாயகன் செயல்படுத்தும் அந்தப் பயங்கரமான யோசனையை யதார்த்தத்துடன் ஒப்பிட்டே பார்க்க முடியவில்லை. அதேபோல் போலீஸ் விசாரணைக் காட்சிகளும் நம்பும் வகையில் இல்லை.
இத்தனை பிரச்னைகளுக்கு மத்தியில் சிறையில் வருகிற சண்டைக் காட்சி சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

சாதி என்பதை விளக்க ‘குணம்’, ‘பிறப்பு’, ‘செயல்’ என்று சில வார்த்தைகளை வைத்துத் தெளிவற்ற கருத்தைச் சொன்னாலும், ஆணவக் கொலைக்கு எதிராகக் கருத்தைச் சொல்ல வேண்டும் என்கிற இயக்குநரின் எண்ணத்துக்குப் பாராட்டுகள். ஆனால் ஒரு படத்திற்கு அந்த எண்ணம் மட்டுமே போதாதே!
தேர்ந்த திரைமொழியும், நேர்த்தியான ஆக்கமும், சிறப்பான திரையெழுத்தும் அவசியமல்லவா? அந்த வகையில் கதை சொல்லல் முறையிலேயே தடுமாறுகிறது படம்.
பெருங்கோபம் கொண்டு சாதிய அநீதிகளைப் பேச முயன்றாலும், கதையின் சிக்கலான திரைக்கதைப் பயணம், சுமாரான திரையாக்கம் ஆகியவற்றால் இந்தப் படம் நம் பேரன்பைச் சம்பாதிக்கத் தவறுகிறது.