நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிப்பில் உருவான பீனிக்ஸ் – வீழான் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் நடைபெற்றது.
“என் பையன் விஷயங்களை அவன்தான் முடிவு செய்யணும்”
இதில் கலந்துகொண்டு மகன் பற்றிப் பேசிய விஜய் சேதுபதி, “2019ல் அனல் அரசு என்கிட்ட கதை சொன்னாரு. ரொம்பநாள் கழிச்சு பாத்துகிட்டதால என்னுடைய குடும்ப புகைப்படங்களைக் காட்டினேன். அவரும் அவரது குடும்ப புகைப்படங்களைக் காட்டினார். பின்னர் ஜவான் பாடப்பிடிப்பில் சந்தித்தபோது இதைப் பற்றி பேசினோம். மகாராஜாவில் எனக்காக வந்து பணியாற்றினார்.
என்கிட்ட கதை சொன்னபிறகு, ‘நம்ம வீட்ல அந்த வயசுல ஒரு பையன் இருக்கான், அவனைப் பற்றி கேட்கவில்லையே’ன்னு தோனிச்சு. பிறகு செட்லதான் சொன்னாரு, உங்க பையன் சரியா இருப்பார்ன்னு. எனக்கு அப்போது சந்தோசமும் இருந்தது, பயமும் இருந்தது.
அப்பதான் காலேஜ் சேர்ந்திருந்தான். எப்படி பண்ணுவான்னு சந்தேகம் இருந்தது. ஆனால் என் பையனுடைய முடிவுகளை அவனேதான் எடுக்கணும்னு நெனச்சேன்.
சிந்துபாத் படம் நடிக்கும்போது அவனுக்கு 14 வயசு. அப்போது அவன் பழக வேண்டும் என்பதற்காக ஏர்போர்ட் மாதிரி இடங்களில் தனியாக விட்டேன். அப்போது அவனே வந்து, ‘அப்பா நான் இன்னும் வளரல, என்னைத் தனியா விடாத’ன்னு சொன்னான்.
இப்போ, இந்த விஷயத்தை அவனே கையளனும் நெனச்சேன். அவனேதான் மாஸ்டர்கிட்ட கதைகேட்டான்.” என்றார்.