”ஜீவஜோதி தன் கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெரும் சட்டப் போராட்டம் நடத்தி, அதில் தொடர்புடைய ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தந்தார். அதை மையப்படுத்தின கதையாக ‘தோசா கிங்’ உருவாகிறது. இயக்குநர் ஞானவேல் ‘ஜெய்பீம்’ முடித்த உடனே இந்தக் கதையை இயக்க நினைத்தார். ஆனால், அவருக்கு ரஜினியின் ‘வேட்டையன்’ படம் அமையவே அதனை இயக்க சென்றார்.
படத் தயாரிப்பு நிறுவனமான ஜங்கிலி, ஞானவேலைத் தேர்வு செய்ததற்குக் காரணம், ‘தோசா கிங்’ தமிழகத்தில் நடந்த உண்மை சம்பவம் என்பதால் தமிழ்ப் பட இயக்குநர் இந்தப் படத்தை இயக்கினால் சிறப்பாக இருக்கும் எனக் கருதிய தயாரிப்பு நிறுவனம், ’ஜெய்பீம்’ பட இயக்குநர் த.செ.ஞானவேலிடம் கேட்டிருக்கிறது .
அது போலக் கடந்த சில வருடங்களாகவே ஜீவஜோதியின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க ஜங்கிலி பிக்சர்ஸ் நிறுவனம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டு கையெழுத்தும் ஆகிவிட்டது. தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கொலை, அது தொடர்பான சட்டப்போராட்டம் என ஜீவஜோதியின் வாழ்க்கையில் நடந்த பரபரப்புகள் நிறைந்த சம்பவங்களைக் கேட்டு திரைக்கதையைத் தயார் செய்துள்ளனர். ’ஜெய்பீம்’ படத்தில் உண்மை சம்பவத்தை யதார்த்தமாக எடுத்திருந்தார் இயக்குநர் த.செ.ஞானவேல். இந்த வாழ்க்கையும் அதேபோல் அசலாகப் படமாக்குவார் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்கிறார்கள்.

அதைப்போல ஞானவேலும் ‘தோசா கிங்’கிறாகவே இரண்டு வருடங்களுக்கு மேலாக உழைத்து ஸ்கிரிப்ட்டை ரெடி செய்திருக்கிறார். சமீபத்தில் மோகன்லாலைச் சந்தித்து இந்தக் கதையைச் சொல்லியிருக்கிறார் ஞானவேல். முழுக்கதையையும் கேட்டு வியந்த மோகன்லால் ‘தோசா கிங்’கில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.