இரண்டாம் பாதி ஆரம்பிக்க, கோவா, காத்மாண்டு, டெல்லி, காயல்பட்டினம் என கதை ‘கட்’களில் வேகமாகச் சென்றாலும், அதற்காக எழுதப்பட்ட திரைக்கதையின் வழியே கூட்டமான பஸ்ஸில் மெதுவாக அந்த இடத்திற்குப் பயணித்தால் என்ன உணர்வு வருமோ அத்தகைய அயர்ச்சியே உண்டாகிறது.
‘நாயகன் மீண்டு வருகிற’ ஜனரஞ்சக படத்தில் லாஜிக் தேவையில்லை என்று நினைத்தாலும், ஒரு கட்டில் கோவா, அடுத்த கட்டில் டெல்லி என்பதெல்லாம் புரியாத புதிராகவே இருக்கிறது.
குருதிப்புனலில் மிதக்கும் இரண்டாம் பாதியில் கத்தியும், துப்பாக்கியும் நாயகர்கள் மத்தியில் விளையாடிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் அந்த விளையாட்டு டி20 மோடில் நகராமல் ‘டெஸ்ட்’ மோடில் நகர்ந்து நம்மைச் சோதிக்கின்றன.

மேலும் அவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள், எதற்காக கமிஷன் என்ற எந்தக் கேள்விக்கான பதில்களும் சொல்லப்படவில்லை. இவர்களைப் பிடிக்க வரும் போலீஸ் படையும் எட்ட நின்று வேடிக்கை பார்ப்பது எல்லாம் எக்ஸ்பைரியான மசாலா ஐட்டங்கள்!
தொழில்நுட்ப ரீதியாக ‘தக் லைஃப்’ கண்ணாடியைப் போட்டு மிரட்டும் இந்தப் படம், திரைக்கதையில் அந்தக் கண்ணாடியைத் தொலைத்துவிட்டதால் சுவாரஸ்யத்தை நாம் தேட வேண்டியதாக இருக்கிறது.