சென்னை: விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ உடன் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படம் பொங்கல் ரேஸில் மோதுவது குறித்து இயக்குநர் சுதா கொங்கரா பதில் அளித்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கி வரும் ‘பராசக்தி’ படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டான் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு இப்படம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த ஆண்டு பொங்கல் பந்தயத்தில் ‘ஜனநாயகன்’ படத்துடன் ‘பராசக்தி’ மோத உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் சமீபத்திய நிகழ்வு ஒன்றில் ‘பராசக்தி’ படம் குறித்து இயக்குநர் சுதா கொங்கரா பேசுகையில், “சிவகார்த்திகேயன் கண்டிப்பாக இந்த கதாபாத்திரத்துக்கு பொருந்தக் கூடிய ஒரு நடிகர். அவரிடம் ஒரு நேர்மை, ஈடுபாடு, பக்கத்து வீட்டு பையன் போன்ற பண்பு உண்டு. அது எனக்கு மிகவும் பிடிக்கும். என் படத்தின் ஹீரோவும் அதே பண்பைக் கொண்டவர்தான். ஆனால் ரவி மோகன் அவரது தன்மைக்கு முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை செய்கிறார். நிஜத்தில் அவர் அப்படி கிடையவே கிடையாது. அவர் மிகவும் அற்புதமான மனிதர். ’ஜனநாயகன்’ படத்துடன் ‘பராசக்தி’ மோதுகிறதா என்பது குறித்து எனக்கு தெரியாது. அதற்கு தயாரிப்பாளர் தான் சொல்ல வேண்டும்” என்றார்.